பதிவு செய்த நாள்
19 செப்2012
05:42
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் செவ்வாய்க் கிழமையன்று சுணக்கமாக இருந்தது. தொடர்ந்து, ஒன்பது வர்த்தக தினங்களாக, ஏறுமுகமாக இருந்த பங்கு வியாபாரம், நேற்று சரிவுடன் முடிவடைந்தது. லாப நோக்கம் கருதி, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.
இந்நிலையில், ஸ்பெயின் நாட்டு கடன் பத்திரங்கள் அதிகளவில் முதிர்ச்சி பெறுவதையடுத்து, அந்நாடு, அன்னிய கடன் உதவியை நாடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாக இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், உலோகம், ஆரோக்கிய பராமரிப்பு, தகவல் தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
இருப்பினும், வங்கி, பொதுத் துறை நிறுவனங்கள், மின்சாரம், பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 46.30 புள்ளிகள் சரிவடைந்து, 18,496.01 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 18,580.48 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,469.51 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டி.சி.எஸ்., விப்ரோ, ஹிண்டால்கோ உள்ளிட்ட 16 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், பீ.எச்.இ.எல்., எஸ்.பீ.ஐ., கெயில் உள்ளிட்ட 14 நிறுவனப் பங்குகளின் விலை, அதிகரித்தும் காணப்பட்டது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 9.95 புள்ளிகள் குறைந்து, 5,600.05 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5,620.55 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,586.45 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|