பதிவு செய்த நாள்
20 செப்2012
12:05
தமிழகத்தில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி, 150 மெகாவாட்டாகக் குறைந்ததால், மின் தடை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சிறு, குறு தொழிற்சாலைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், நான்கு ஆண்டுகளாக, தொடர் மின் தடை இருந்து வருகிறது. தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாததால், மின் தடை கட்டாயமாக்கப் பட்டுள்ளது. மேட்டூர், தூத்துக்குடி, எண்ணூர் உள்ளிட்ட அனல் மின் நிலையங்களில், அவ்வப்போது மின் உற்பத்தி பாதித்து விடுவதால், காற்றாலை மூலம் கிடைத்த, 3,500 மெகாவாட் மின் உற்பத்தியைக் கொண்டு, மின் வாரியம் சமாளித்து வந்தது.
தென் மாவட்டங்களில், அதிகமான காற்றாலைகள் இயங்குகின்றன. மழையும், காற்றும் எதிர்பார்த்த அளவு இல்லாததால், சில மாதங்களாக, மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், காற்றாலை மூலம் கிடைத்து வந்த, 3,500 மெகாவாட் மின்சாரம் படிப்படியாகக் குறைந்து, 1,500 மெகாவாட்டாகி உள்ளது. நேற்று ஒரே நாளில், 1,500ல் இருந்து, 150 மெகாவாட்டாக, காற்றாலை மின் உற்பத்தி சரிந்தது. இதனால், சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களிலும், காலை, 9 மணி முதல், மாலை, 4 மணி வரை, தொடர் மின் தடை ஏற்பட்டது. இரவு நேரத்தில், இரண்டு மணி நேரத்துக்கு, ஒருமுறை மின் தடை ஏற்படுத்தப்பட்டது. மின் தடையை சமாளிக்க முடியாமல், மின் வாரிய அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
இது தொடர்பாக, மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மின் வாரிய தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். "காற்றாலை மின்சாரம் இனிமேல் கிடைப்பதற்கான வாய்ப்பில்லை; வெளி மாநிலத்தில் இருந்து மின்சாரத்தை வாங்கினால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும்' என, அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தினமும், 10 மணி நேரமாக இருந்த மின் தடை, 14 மணி நேரமாக உயர்ந்துள்ளதால், சிறு, குறு தொழிற்சாலைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெயிலும் அதிகம் காணப்படுவதால், வீடுகளில் மின்சாரம் இல்லாமல், மக்கள் புழுக்கத்தில் தவிக்கின்றனர். ஈரோடு மின் வாரிய தலைமை இன்ஜினியர் ஜெபராஜ் கூறுகையில், ""4,000 மெகாவாட்டாக இருந்த காற்றாலை மின் உற்பத்தி, நேற்று காலை நிலவரப்படி, 150 மெகாவாட்டாகக் குறைந்து விட்டது. இதனால், சென்னையைத் தவிர மற்ற இடங்களில், காலையிலிருந்து மின் தடை ஏற்படுத்தப்பட்டது. சென்னையில் உள்ள அதிகாரிகள் உத்தரவு வழங்கிய பின் தான், மற்ற இடங்களுக்கு சப்ளையை கொடுக்க முடியும். காற்றாலை மின் உற்பத்தி, இனிமேல் அதிகரிக்க வாய்ப்பில்லை. வெளிமாநிலத்தில் இருந்து மின்சாரம் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|