பதிவு செய்த நாள்
26 செப்2012
00:26
கொச்சி:மஞ்சள் கையிருப்பு மிகவும் அதிகமாக இருப்பதால், மஞ்சள் விலை உயர வாய்ப்பில்லை என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சாகுபடி பரப்பளவு:வரும் பருவத்தில், மஞ்சள் சாகுபடி பரப்பளவு, நடப்பு பருவத்தை விட, 35-40 சதவீதம் சரிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையிலும், இதன் விலை உயராது என்றும், வரும் 2013ம் ஆண்டு, ஜூலை மாதத்திற்கு பிறகே, மஞ்சள் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என, மஞ்சள் வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.
வரும் 2012-13ம் பருவத்தில், மஞ்சள் உற்பத்தி, 50 லட்சம் மூட்டைகள் என்ற அளவில் குறைவாகத்தான் இருக்கும். இதன் உற்பத்தி, நடப்பு 2011-12ம் பருவத்தில், 90 லட்சம் மூட்டைகளாக உள்ளன.மஞ்சள் அதிக அளவில் உற்பத்தியாகும் ஆந்திராவில், காலம் தவறிய மழைப் பொழிவால், இதன் சாகுபடி 18-20 சதவீதம் குறைந்துள்ளது.
மாற்று பயிர்:மஞ்சளுக்கான தேவை போக, 30-35 லட்சம் மூட்டைகள் கையிருப்பில் உள்ளதால், இதன் விலை உயர வாய்ப்பில்லை. குறிப்பாக, உள்நாடு மற்றும் ஏற்றுமதி உட்பட மஞ்சளுக்கான தேவை 65-75 லட்சம் மூட்டைகள் என்ற அளவில் உள்ளது.கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், ஒரு குவிண்டால் மஞ்சள் விலை, வரலாறு காணாத அளவிற்கு, 16,350 ரூபாயாக மிகவும் அதிகரித்திருந்தது.
ஆனால், அதன் பின், இதன் விலை 80 சதவீதம் சரிவடைந்து, ஒரு குவிண்டால், 3,360 ரூபாயாக மிகவும் வீழ்ச்சி கண்டது.மஞ்சள் விலை சரிவால், பல விவசாயிகள், பருத்தி, மரவள்ளி மற்றும் சோயா உள்ளிட்ட மாற்று பயிர் சாகுபடிக்கு மாறிஉள்ளனர்.தற்போது, நடப்பு சந்தையில், ஒரு குவிண்டால் மஞ்சள் விலை, 5,500-5,700 ரூபாய் என்ற அளவில் உள்ளது. கடந்த 2011-12ம் நிதியாண்டில், 79,500 டன் மஞ்சள் ஏற்றுமதியானது. இது, அதற்கு முந்தைய ஆண்டை விட, 61 சதவீதம் அதிகமாகும்.
தேவை:இது குறித்து, முன்பேர வர்த்தக சந்தையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் கூறுகையில்,"வரும் பருவத்தில், நாட்டின் மஞ்சள் உற்பத்தி 20 சதவீதம் குறைந்து, 10 லட்சம் டன்னாக இருக்கும். உள்நாடு மற்றும் ஏற்றுமதிக்கான தேவை குறைந்துள்ளதால், இதன் விலை, உடனடியாக உயர வாய்ப்பில்லை' என்று தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|