பதிவு செய்த நாள்
29 செப்2012
00:35
புதுடில்லி:இந்தியாவின் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி, சென்ற ஆகஸ்ட் மாதம் 10 சதவீதம் அதிகரித்து, 49.70 கோடி டாலராக (2,733 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இது,கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 45.20 கோடி டாலராக (2,486 கோடி ரூபாய்) இருந்தது என, கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு குழு (இ.பி.சி.எச்.,) வெளியிட்டு உள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவேற்பு: அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார மந்தநிலையிலும், இந்தியாவின் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது."இதற்கு, சீனா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்கா போன்ற புதிய சந்தைகளில், இந்திய கைவினைப் பொருட்களுக்கு கிடைத்த வரவேற்பு தான் காரணம்' என, இக்குழுவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்தியாவின் ஒட்டுமொத்த கைவினைப் பொருட்கள் ஏற்றுமதியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது.மதிப்பீட்டு காலத்தில், உலோக கைவினைப் பொருட்கள், அதிக அளவில் ஏற்றுமதியாகி உள்ளன.
இதைத் தொடர்ந்து "எம்பிராய்டரி' செய்யப்பட்ட திரைச்சீலைகள், மேசை விரிப்புகள் உள்ளிட்டவை, 114 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன. கையினால் அச்சடித்த ஜவுளிகள் மற்றும் துண்டுகளின் ஏற்றுமதி வளர்ச்சி, 59 சதவீதமாக உள்ளது.
நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில், நாட்டின் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி, சென்ற நிதியாண்டின், இதே காலத்தை விட, 9.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 120 கோடி டாலராக (6,600 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.
ஜெய்ப்பூர்:சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி, 275 கோடி டாலராக இருந்தது. இது, நடப்பு நிதியாண்டில், 320 கோடி டாலராக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. கைவினைப் பொருட்கள் ஏற்றுமதியில், மொராதாபாத், ஜெய்ப்பூர், சகாரான்பூர், ஜோத்பூர், நரசபூர் ஆகிய நகரங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன. இங்குள்ள, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்களின் கலைப் படைப்புகள், பன்னாட்டு இல்லங்களையும், அலுவலகங்களையும் அலங்கரித்து வருகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|