பதிவு செய்த நாள்
29 செப்2012
00:40
புதுடில்லி:சகாரா குழுமம், அதன் இரண்டு துணை நிறுவனங்கள் மூலம் முதலீட்டாளர்களிடம் இருந்து, வசூலித்த 24 ஆயிரம் கோடி ரூபாயை, 15 சதவீத வட்டியுடன் மூன்று மாதங்களில் திரும்ப வழங்குவதாக, சுப்ரீம் கோர்ட்டில் உறுதி அளித்துள்ளது.
முறைகேடு:சகாரா குழுமத்தை சேர்ந்த சகாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேஷன் மற்றும் சகாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனங்கள், விருப்பத்தின் பேரில் முழுவதும் பங்குகளாக மாறக் கூடிய கடன் பத்திரங்களை வெளியிட்டு, 24 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டிக் கொண்டன.இதில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான "செபி' தொடர்ந்த வழக்கில், முதலீட்டாளர்களின் விவரங்களை சகாரா நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் என, அலகாபாத் கோர்ட் தீர்ப்பளித்தது.இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சென்ற ஆகஸ்ட் 31ம் தேதி, சகாரா நிறுவனங்கள், முதலீட்டாளர்களிடம் இருந்து வசூலித்த பணத்தை, 15 சதவீத வட்டியுடன், மூன்று மாதங்களில் திரும்ப அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
அவ்வாறு வழங்கத் தவறினால், இரு நிறுவனங்களின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்கலாம் என்றும், முதலீட்டாளர்கள் குறித்த அனைத்து விவரங்களையும், செப்டம்பர் 10ம் தேதிக்குள் "செபி'யிடம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தது. இந்த நடவடிக்கைகளை மேற்பார்வையிட, சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி பி.என். அகர்வாலையும் சுப்ரீம் கோர்ட் நியமித்தது.
கோர்ட் அவமதிப்பு:ஆனால், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி உரிய ஆவணங்களை வழங்காத சகாரா நிறுவனங்கள் மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, "செபி' சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.இந்த மனு, நேற்று, சுப்ரீம் கோர்ட் நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு முன்பு, விசாரணைக்கு வந்தது. அப்போது, சகாரா நிறுவனங்கள் சார்பாக ஆஜரான, மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம், "முதலீட்டாளர்களிடம் இருந்து வசூலித்த பணத்தை திரும்ப அளித்து விடுகிறோம். பின்வாங்க மாட்டோம். ஆவணங்களை அளிக்க மேலும் கால அவகாசம் வேண்டும்' என, கேட்டுக் கொண்டார்.இதை ஏற்று, வழக்கு விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு, நீதிபதி ஒத்தி வைத்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|