பதிவு செய்த நாள்
29 செப்2012
10:43
புதுடில்லி:ரயில்களில், "ஏசி' வகுப்பு கட்டணங்கள் மற்றும் சரக்கு கட்டணங்களுக்கு, 3.7 சதவீத சேவை வரி விதிப்பு, அக்., 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. "இந்த தேதிக்கு முன், ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள டிக்கெட்டுகளுக்கு, பயணத்தின் போது, சேவை வரி வசூலிக்கப்பட மாட்டாது' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்களில், முதல் வகுப்பு, " ஏசி' வகுப்பு மற்றும் சரக்கு கட்டணங்கள் ஆகியவற்றிற்கு, 3.7 சதவீதம் சேவை வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. இது, அக்., 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, முதல் வகுப்பு, "ஏசி' முதல் வகுப்பு, "ஏசி' இரண்டாம் வகுப்பு , "ஏசி' மூன்றாம் வகுப்பு மற்றும் "ஏசி' சேர் கார் ஆகியவற்றிற்கு இப்போதுள்ள கட்டணத்தில் இருந்து, சேவை வரியாக, 3.7 சதவீதம் கூடுதலாக செலுத்த வேண்டும்.
அக்., 1ம் தேதிக்குப் பின், வரும் நாட்களில் பயணம் செய்வதற்காக, ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணிகள், சேவை வரியை பயணத்தின் போது, ரயில் டிக்கெட் பரிசோதகரிடம் செலுத்த வேண்டும். சேவை வரி அமலுக்கு வந்தபின், முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை கேன்சல் செய்யும்போது, சேவை வரி திரும்பத் தரப்பட மாட்டாது என, நேற்று முன்தினம் வெளியான தகவலில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதை தெளிவுபடுத்தி, ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது; சேவை வரி, அக்., 1ம் தேதி தான் அமலுக்கு வருகிறது. அன்றிலிருந்து வாங்கப்படும், முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே சேவை வரி வசூலிக்கப்படும். ஏற்கனவே, முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு, சேவை வரி வசூலிக்கப்பட மாட்டாது. பயணத்தின் போது, டிக்கெட் பரிசோதகரிடம் செலுத்த வேண்டியதில்லை.
செப்., 30ம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு, சேவை வரி வசூலிக்கப்பட மாட்டாது. அதேபோல், சேவை வரி அமலுக்கு வந்தபின், பயணிகளால் ரத்து செய்யப்படும், மேற்கண்ட வகுப்புகளுக்கான டிக்கெட்டுகளுக்கு, சேவை வரி திரும்ப அளிக்கப்படும். சேவை வரி பிடித்தம் செய்யப்பட மாட்டாது.இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|