பதிவு செய்த நாள்
01 அக்2012
05:37
ஓசூர்:ஓசூர் பகுதியில், மின் தடையால், குளிர்பதன கிடங்குகளில் ரோஜா மலர்களை சேமித்து வைக்க முடியாததால், மலர் ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதியை, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.பசுமை குடோன்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகாவில் நிலவும் நல்ல மண் வளம், சீதோஷ்ண நிலையை பயன்படுத்தி, விவசாயிகள் அதிகளவு ரோஜா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். 5,000 ஏக்கரில், விவசாயிகள், ரோஜாவை திறந்த வெளி மற்றும் பசுமை குடோன்களில் சாகுபடி செய்துள்ளனர்.
திறந்த வெளியில் உற்பத்தி செய்யும் மலர்களை, உள்ளூர் சந்தைகளுக்கும், பசுமை குடோன்களில் உற்பத்தியாகும் ரோஜா மலர்களை, வெளிநாடுகளுக்கும், விவசாயிகள் ஏற்றுமதி செய்கின்றனர்.ஓசூர் பகுதியில் உற்பத்தியாகும் தாஜ்மகால், கிராண்ட் கலா, பஸ்ட் ரெட், ஒயிட், ரெட், எல்லோ உள்ளிட்ட, 40 வகை ரோஜா மலர்கள், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, துபாய் மற்றும் அரேபியா நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது.புத்தாண்டு:குறிப்பாக, காதலர் தினம், அன்னையர் தினம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினங்களில், 50 லட்சம் முதல், ஒரு கோடி வரையிலான மலர்களை, விவசாயிகள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
இந்நிலையில், ஓசூர் பகுதியில், இரண்டு ஆண்டுகளாக பருவ மழை மிகவும் குறைந்துள்ளது.இதனால், நிலத்தடி நீர் மட்டம் வறண்டு, ரோஜா செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டது. ரோஜா செடிகளுக்கு உயர் தொழில்நுட்ப சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீர் பாசனம் செய்யப்படுகிறது. இதற்கு, மின்சாரம் முக்கிய அத்தியாவசிய தேவையாகிறது. தற்போது, தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் தொடர் மின்தடையால், விவசாயிகள், ரோஜா செடிகளுக்கு சரியான தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை.ஒரு வாரமாக, ஓசூர் தாலுகாவில், தினசரி, 14 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால், குழாய் கிணறுகளில் உள்ள குறைந்தளவு தண்ணீரை கூட, செடிகளுக்கு பாய்ச்ச முடியவில்லை.
செடிகளில் அறுவடை செய்த ஏற்றுமதி ரக மலர்கள் குளிர்பதன கிடங்குகளில் பாதுகாத்து வைக்கப்படுகின்றன. இவற்றை, வாரம் ஒரு முறை, விவசாயிகள் டில்லி, மும்பை, பெங்களூரு, கோல்கட்டா, சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட உள்நாட்டு மலர் சந்தைகளுக்கும், வெளிநாட்டு மலர் சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.
குளிர்பதன கிடங்கு:தொடர் மின் தடையால், விவசாயிகள், ரோஜா மலர்களை பறித்து, குளிர்பதன கிடங்குகளில் சேமித்து வைக்க முடியவில்லை. தற்போது, விவசாயிகள், தினசரி பறிக்கும் மலர்களை உள்நாட்டு சந்தைகளுக்கு மட்டுமே விற்பனைக்கு அனுப்புகின்றனர். தரமற்ற மலர் மற்றும் விலை வீழ்ச்சியால், விவசாயிகள் மலர் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.தரமற்ற மலர் உற்பத்தியால், 150 ரூபாய்க்கு விற்பனையான, 20 பூக்கள் கொண்ட ஒரு கொத்து, தற்போது, 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|