பதிவு செய்த நாள்
02 அக்2012
00:18
மும்பை:நடப்பு 2012-13ம் (ஜூலை - ஜூன்) பருவத்தில், நாட்டின் சோயா உற்பத்தி, 1.27 கோடி டன் என்ற புதிய உச்சத்தை எட்டும் என, இந்திய சோயா பதனீட்டாளர் கூட்டமைப்பு (எஸ்.பீ.ஏ.ஐ.,) மதிப்பிட்டுள்ளது. அதிக பரப்பளவில் சோயா பயிரிடப்பட்டுள்ளதாலும், விளைச்சல் நன்கிருக்கும் என்ற எதிர்பார்ப்பாலும், உற்பத்தி இலக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக, எஸ்.பீ.ஏ.ஐ., தெரிவித்துள்ளது.மத்திய பிரதேசம்:சென்ற 2011-12ம் பருவத்தில், விவசாயிகள் 10.30 கோடி ஹெக்டேரில் சோயாவை பயிரிட்டுஇருந்தனர்.
இதே காலத்தில், சோயா உற்பத்தி 1.16 கோடி டன் என்ற அளவில் புதிய உச்சத்தை எட்டியிருந்தது.நடப்பு பருவத்தில், சோயா பயிரிடும் பரப்பளவு,சென்ற பருவத்தை விட, 30 லட்சம் ஹெக்டேர் அதிகரித்து, 10.60 கோடி ஹெக்டேராக உயர்ந்துள்ளது. இதனால், நடப்பு பருவத்தில் சோயா உற்பத்தி, கடந்த பருவத்தை விஞ்சும் அளவிற்கு உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவில், மத்திய பிரதேசத்தில் தான் அதிக அளவில் சோயா விளைகிறது. இம் மாநிலத்தில், சென்ற பருவத்தில் 67 லட்சம் டன் சோயா உற்பத்திஆனது. மகாராஷ்டிரா:மத்திய பிரதேசத்தில் இருந்து நாளொன்றுக்கு 70 ஆயிரம் சோயா மூட்டைகள் சந்தைக்கு வரத் துவங்கியுள்ளன. இது, வரும் வாரத்தில் இருந்து, ஒரு லட்சம் மூட்டைகளாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மகாராஷ்டிராவில், சோயா உற்பத்தி சற்றே அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில், சென்ற பருவத்தில் 40 லட்சம் டன் சோயா உற்பத்தியானது.
குறைந்த மழை பொழிவால், ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்களில், சோயா உற்பத்தி குறையும் என, தெரிகிறது. சென்ற பருவத்தில், இம்மாநிலங்களின் சோயா உற்பத்தி, முறையே 12.30லட்சம் டன் மற்றும் 2.20 லட்சம் என்ற அளவில் இருந்தது.சோயா விளைச்சலைப் பொருத்தவரை, பரப்பளவு அடிப்படையிலான மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில், கோலாப்பூர் மற்றும் சாங்லி பகுதிகளில், வறட்சி காணப்பட்ட நிலையிலும், சோயா விளைச்சல், ஒரு ஹெக்டேருக்கு 1.40 டன் என்ற அளவில், தொடர்ந்து உயர்ந்து காணப்படுகிறது.
மத்தியபிரதேசத்தில், ஒரு ஹெக்டேரில், 1.10 டன் சோயா விளைகிறது. அதே சமயம், ராஜஸ்தான் மாநிலத்தில், விவசாயிகள் ஒரு ஹெக்டேரில், 1.25 டன் சோயாவை அறுவடை செய்கின்றனர்.ஆந்திரா:ஆந்திரா மற்றும் சத்தீஸ்கரில், சென்ற பருவத்தில் முறையே, 2.17 லட்சம் டன் மற்றும் 1.70 லட்சம் டன் சோயா உற்பத்தி செய்யப்பட்டது. இந்தியாவின் இதர மாநிலங்களின் சோயா உற்பத்தி, 1.50 லட்சம் டன்னாக இருந்தது.கடந்த ஆண்டு, அமெரிக்கா, பிரேசில், அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில், வறட்சி காரணமாக சோயா உற்பத்தி குறைந்தது. இதனால் சர்வதேச சந்தையில், கடந்த ஓராண்டாக சோயா விலை, இருமடங்கு அதிகரித்தது. சென்ற ஜூலை மாத இறுதியில், ஒரு குவிண்டால் சோயா, வரலாறு காணாத வகையில் 4,900 ரூபாயாக உயர்ந்தது.
கையிருப்பு:நடப்பு பருவத்தில், சாதனை படைக்கும் அளவிற்கு சோயா உற்பத்தி இருக்கும் என்ற மதிப்பீடு காரணமாகவும், சர்வதேச சந்தையில் கச்சா பாமாயில் வரத்து அதிகரித்ததாலும், கடந்த சில மாதங்களாக, சோயா விலை வீழ்ச்சி கண்டுள்ளது. ஒரு குவிண்டால் சோயா 3,250 ரூபாயாக குறைந்துள்ளது.இது, ஒரு குவிண்டால் சோயாவிற்கான அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையை (2,240 ரூபாய்) விட, அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்ந்து வருவதாலும், சர்வதேச நிலவரங்களாலும், தொடர்ந்து சோயா விலை, இதே அளவில் இருக்கும் என, இத்துறையினர் தெரிவித்துள்ளனர்.சோயா விலை வீழ்ச்சியால், விவசாயிகள் சோயாவை அதிக அளவில் கையிருப்பு வைத்துஉள்ளனர் என, அவர்கள் மேலும் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|