பதிவு செய்த நாள்
06 அக்2012
00:29
ராசிபுரம்:ராசிபுரத்தில் தயாரிக்கப்படும் நெய், தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை நெருங்குவதால், நெய் விலை உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் வீட்டில் வளர்க்கும் கறவை மாடுகள், எருமைகள் தரும் பாலில் இருந்து வெண்ணெய், மோர் ஆகியவற்றை, தனித்தனியாக பிரித்தெடுக்கின்றனர். தயிரில் இருந்து பிரித்து எடுக்கப்படும் வெண்ணெயை சேகரித்து, வாரந்தோறும் செவ் வாய்க்கிழமை கூடும் சந்தைக்கு கொண்டு வந்து, விற்பனை செய்கின்றனர்.
புதிய பேருந்து நிலையம், கடை வீதி, கச்சேரி வீதி, பூக்கடை வீதி உள்ளிட்ட இடங்களில், நெய் காய்ச்சும் மண்டிகள் உள்ளன.இங்கு, வெண்ணெயை உருக்கி, தெளிந்த நெய், தெளியாத நெய் என, இரண்டு வகை நெய் தயாரிக்கப்படுகிறது.பசும் பாலில் இருந்து தெளிந்த நெய்யும், எருமைப்பாலில் இருந்து தெளியாத நெய்யும் தயாரிக்கின்றனர்.
பசும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய், இளம் மஞ்சள் நிறத்திலும், தெளிந்தும் காணப்படுவதால், கோவிலுக்கு விளக்கு ஏற்றவும், வீட்டு உபயோகத்துக்கும் பயன்படுத்து கின்றனர். எருமைப்பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய், அடர்த்தியாகவும், வெண்மையாக வும் காணப்படும். இந்த நெய், இனிப்பு வகைகள் தயாரிக்கப் பயன்படுத்தப் படுகிறது.விநயாகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி மற்றும் சபரிமலை யாத்திரை காலங்களில், நெய் விற்பனை சூடுபிடிக்கும். அப்போது நெய் விலை, கூடுதலாக இருக்கும்.
ராசிபுரத்தில் இருந்து தெளிந்த நெய், சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, கோயமுத்தூர் உள்பட பிற மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப் படுகிறது. தற்போது, ஒரு லிட்டர் அக்மார்க் நெய், 280 ரூபாய்க்கும், சாதாரண நெய், 220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில், நெய் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|