பதிவு செய்த நாள்
06 அக்2012
00:36
தங்கம் விலை உயர்வு, அன்னியச் செலாவணி மதிப்பில் அதிக ஏற்ற, இறக்கம் போன்றவற்றால், தங்கம் மற்றும் வைர ஆபரணங்களுக்கான தேவை, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் குறைந்துள்ளது.நடப்பு ஆண்டில், சென்ற செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், தங்கம் மற்றும் வைர வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள அமைப்பு சார்ந்த நிறுவனங்களின் விற்பனை, சென்ற ஆண்டின் இதே காலத்தை விட குறைந்துள்ளது.
பண்டிகை கால:தங்க, வைர ஆபரணங்களின் விற்பனை, மதிப்பு மற்றும் அளவின் அடிப்படையில், முறையே 15-20 சதவீதம் மற்றும் 30-40 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இருந்தபோதிலும், தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைகள் வருவதையொட்டி, விற்பனை சூடு பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பில் தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் உள்ளனர். பொதுவாகவே தங்க நகை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், அவற்றின் ஆபரணங்களுக்கு செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என்று பலவிதமான விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்து வருகின்றன.
இந்நிலையில், ஒரு சில நிறுவனங்கள், புதுமையான சலுகைத் திட்டங்களின் மூலம், விற்பனையை உயர்த்த திட்டமிட்டுள்ளன. இது குறித்து, இந்திய நவரத்தினங்கள் மற்றும் நகை வர்த்தகர்கள் கூட்டமைப்பின் தலைவர் பச்ராஜ் பமல்வா கூறுகையில், "கடந்த ஆறு மாதங்களாக விற்பனை சரிவடைந்துள்ளது. அதை ஓரளவிற்காவது ஈடு செய்ய, சலுகைத் திட்டங்கள் உதவும்' என்று தெரிவித்தார்.கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம், தங்கம், வைர ஆபரணங்கள், பட்டை தீட்டப்பட்ட வைரம் மற்றும் நவரத்தினக் கற்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்து வருகிறது.
அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் 135 சில்லரை விற்பனைக் கடைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனம், 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு, வைர நகை வாங்குவோருக்கு, ஒரு கிராம் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படும் என, கவர்ச்சிகரமான சலுகைத் திட்டத்தை அறிவித்துள்ளது.குறிப்பிட்ட தொகைக்கு மேல் வாங்கும் வைர நகைகளுக்கு, அவற்றின் மொத்த மதிப்பின் அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்ட தங்க நாணயம் வழங்கப்படும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின் தலைவர் மெகுல் சோக்சி கூறியதாவது: அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி, உடனடியாக மீளும் என்பதற்கான அறிகுறி இல்லை என்று அங்குள்ள நகை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், பாரம்பரியமான வர்த்தகம் தான் நடைபெறுகிறது. இந்த நிலையிலும், சென்ற மாத விற்பனை, ஏழு சதவீதத்தில் இருந்து ஒன்பது சதவீதமாக சற்றே உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.டாட்டா குழுமத்தை சேர்ந்த தனிஷ்க் நிறுவனம், பிரத்யேக வணிக பெயரில் தங்க நகைகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம், வரும் வாரம் பல்வேறு சலுகைத் திட்டங்களை அறிவிக்க உள்ளது.
வளர்ச்சி:இது குறித்து, இந்நிறுவனத்தின் துணை தலைவர் சந்தீப் குல்ஹல்லி கூறும்போது, "கடந்த ஐந்து ஆண்டு களாக, நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 40-45 சதவீதம் என்ற அளவில் இருந்தது. ஆனால், நடப்பாண்டு இது வெகுவாக சரியும் என, எதிர்பார்க்கப்படுகிறது' என்றார்.
கோல்கட்டாவைச் சேர்ந்த கணேஷ் ஜூவல்லரி ஹவுஸ் நிறுவனம், தங்க நாணயங்களுக்கு, செய்கூலி இல்லை என்ற சலுகையை வழங்கியுள்ளது. மேலும், தங்க நகை வாங்குவோருக்கு, செய்கூலியில் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது போன்று மேலும் பல நிறுவனங்கள், தங்க நகை வாங்குவோருக்கு "அன்பளிப்பு அட்டை', பரிசுக் கூப்பன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. இத்தகைய திட்டங்கள் எந்த அளவிற்கு பயனளிக்கும் என்பது, உள்நாடு மற்றும் சர்வதேச நிலவரங்களை பொறுத்தே உள்ளது என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
ஏற்றுமதி:சர்வதேச பொருளாதார நெருக்கடியால், நாட்டின் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு சரிவடைந்துள்ளது. நடப்பு 2012-13ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களில், நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி, 46 சதவீதம் சரிவடைந்து 1.34 கோடி காரட்டாக குறைந்துள்ளது.
இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், 2.48 கோடி காரட்டாக இருந்தது. இதே காலத்தில், ரூபாய் மதிப்பின் அடிப்படையிலான ஏற்றுமதி, 28.7 சதவீதம் சரிவடைந்து, 48,294 கோடியில் இருந்து, 34,450 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.சர்வதேச ஆபரணங்கள் விற்பனையில், அமெரிக்காவின் பங்களிப்பு 40 சதவீதமாக உள்ளது. இந்தியாவின் ஆபரண ஏற்றுமதியில், அமெரிக்காவின் பங்களிப்பும் 40 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|