பதிவு செய்த நாள்
06 அக்2012
00:38
புதுடில்லி:பல்வேறு நாடுகளிலிருந்து, இந்தியாவிற்கு வரும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, நாட்டின், அன்னிய செலாவணி வருவாய் பன்மடங்கு உயர்ந்துள்ளது.நடப்பாண்டு, செப்டம்பர் மாதத்தில், இந்தியா வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, 4.15 லட்சம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.
நடவடிக்கை:இது, கடந்த ஆண்டின், இதே மாதத்தில் வந்த பயணிகளின் எண்ணிக்கையை (4.02 லட்சம்) விட, 3.2 சதவீதம் அதிகமாகும்.கடந்த 2010ம் ஆண்டின், செப்டம்பர் மாதத்தில், இந்தியா வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, 8.7 சதவீதம் உயர்ந்து, 3.70 லட்சமாக இருந்தது. நடப்பாண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், இந்தியா வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, 46.33 லட்சமாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட, (43.75 லட்சம் பேர்) 5.9 சதவீதம் அதிகமாகும். மத்திய, மாநில அரசுகள், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
தாஜ்மகால்:இந்தியாவில், தாஜ்மகால், ஜெய்ப்பூர் பேலஸ், கோவா கடற்கரை, இமயமலை, அஜந்தா எல்லோரா குகை ஓவியங்கள், டார்ஜிலிங், ஊட்டி, மைசூர் அரண்மனை, ஹூமாயூன் நினைவிடம் உள்ளிட்டவை முக்கிய சுற்றுலா மையங்களாக திகழ்கின்றன.மேலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, மருத்துவத்திற்கான செலவு குறைவாக உள்ளது. இதனால், அயல்நாடுகளில் இருந்து, இந்தியாவிற்கு, மருத்துவ சுற்றுலா வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மும்பையில், பயங்கரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா வரும் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.தற்போது, இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனால், சமீப காலமாக இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளால், அன்னிய செலாவணி வருவாய் கிடைப்பதுடன், சுற்றுலாத் தளங்களை சேர்ந்த உள்ளூர் மக்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பும் உருவாக்கப்படுகிறது.
வளர்ச்சி:சென்ற செப்டம்பர் மாதத்தில், இந்தியா வந்த சுற்றுலாப் பயணிகளால், 6,652 கோடி ரூபாய் அன்னிய செலாவணி வருவாய் கிடைத்தது. இது, முந்தைய ஆண்டின், இதே மாதத்தை (5,748 கோடி ரூபாய்) விட, 15.7 சதவீதம் அதிகமாகும்.நடப்பாண்டின், செப்டம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், சுற்றுலா வாயிலாக கிடைத்த அன்னிய செலாவணி வருவாய், முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட, 22.9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 66,061 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|