பதிவு செய்த நாள்
06 அக்2012
00:40
மும்பை:தேசிய பங்குச் சந்தையில், நேற்று நடைபெற்ற வர்த்தகத்தின்போது, திடீரென்று குறியீட்டு எண் "நிப்டி' , 775 புள்ளிகளுக்கும் மேலாக சரிவடைந்து, முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.எனினும், தேசிய பங்குச் சந்தை எடுத்த அதிரடி நடவடிக்கையால், குறியீட்டு எண் "நிப்டி' மீண்டும் எழுச்சி கண்டது. இருந்தபோதிலும், மூன்று நிமிடங்களுக்குள் நடந்து முடிந்த இந்த வீழ்ச்சியில், முதலீட்டாளர்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என, அஞ்சப்படுகிறது.
விசாரணை:இந்த திடீர் சரிவு குறித்து, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான "செபி' விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.நேற்று தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற குளறுபடிக்கு, எம்கே குளோபல் பைனான்சியல் சர்வீசஸ் (எம்.ஜி.எப்.எஸ்.,) என்ற பங்குத் தரகு நிறுவனம் செய்த தவறு தான் காரணம்.ஒரு நிதி நிறுவனத்தின் சார்பாக, "அல்கோ டிரேடிங்' எனப்படும் தொழில்நுட்பத்தில், பங்கு வர்த்தகம் மேற்கொண்ட எம்.ஜி.எப்.எஸ் நிறுவனம், கம்ப்யூட்டரில் தவறான தகவலை அளித்து விட்டதாக கூறப்படுகிறது.
அதாவது, 59 ஆர்டர்களின் கீழ், 650 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பங்குகளை வாங்குவதற்கு பதிலாக, விற்பதற்கான கட்டளையை கொடுத்து விட்டது.நேற்று காலை 9.15 மணிக்கு, தேசிய பங்குச் சந்தையின், குறியீட்டு எண் "நிப்டி', 5,815 புள்ளிகளுடன் வர்த்தகத்தை துவங்கியது. இது, காலை 9.49 மணிக்கு, 5,772.90 புள்ளிகள் என்ற அளவில் இருந்தது.
அப்போது தான், எம்.ஜி. எப்.எஸ்., தவறான கட்டளையை அளித்தது. இதைத் தொடர்ந்து, அடுத்த ஒரு நிமிடத்தில், அதாவது 9.50 மணிக்கு, "நிப்டி' குறியீட்டு எண் திடீரென்று 775 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிவடைந்தது. இதனால், அன்றாட பங்கு வணிகத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்து, தேசிய பங்குச் சந்தை, உடனடியாக எம்.ஜி. எப்.எஸ்., நிறுவனத்தின் தவறை சுட்டிக்காட்டியது. உடனே மின்னல் வேகத்தில் செயல்பட்ட அந்நிறுவனம், 650 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வாங்கியது.
வர்த்தகம் நிறுத்தம்:அடுத்த ஒரு நிமிடத்திற்குள்ளாக, அதாவது காலை 9.51 மணிக்கு, "நிப்டி' 628 புள்ளிகள் அதிகரித்து, 5,625 புள்ளிகளை எட்டியது. மூன்று நிமிடத்தில் இறக்கமும், ஏற்றமும் நடைபெற்று முடிந்து விட்டது. நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டி, மிகப் பெரிய அளவில் பங்கு விற்பனை நடைபெறும்போது, "சர்க்யூட் பில்டர்' முறையில், பங்கு வர்த்தகம் தானாகவே நிறுத்தப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி, காலை 9.50.58 மணிக்கு நிறுத்தப்பட்ட பங்கு வர்த்தகம், மீண்டும் 10.05 மணிக்கு துவங்கியதாக, தேசிய பங்குச் சந்தை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த குளறுபடியால், முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து உறுதியான தகவல் இல்லை. எனினும், நேற்றைய விவகாரத்தில், சில்லரை முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று பங்குச் சந்தை வல்லுனர் நாகப்பன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:"அன்றாட பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் ஊக வணிகர்களுக்குத் தான், இழப்பு ஏற்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கும் இழப்பு ஏற்பட்டிருக்கலாம். முதலீட்டாளர்களைப் பொருத்தவரை, குறுகிய காலம் மற்றும் நீண்ட கால அடிப்படையில் அவர்கள் பங்குகளில் முதலீடு செய்வதால், பங்குச் சந்தையின் தற்காலிக ஏற்ற, இறக்கம் அவர்களை பாதிக்காது.
"செபி' யின் விசாரணையின் முடிவில், அனைத்து விவரங்களும் வெளிவரும். இவ்வாறு நாகப்பன் தெரிவித்தார்.நேற்று தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' வர்த்தகம் முடியும் போது, 40.65 புள்ளிகள் சரிவடைந்து, 5,746.95 புள்ளிகளில் நிலை பெற்றது.வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,815.35 புள்ளிகள் வரையிலும் குறைந்தபட்சமாக 4,888.20 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' 120 புள்ளிகள் வீழ்ச்சி:மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 119.69 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 18,938.46 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 19,137.29 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,757.34 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், எச்.டீ.எப்.சி., விப்ரோ, சன்பார்மா, இன்போசிஸ் உள்ளிட்ட 17 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தது. டாட்டா மோட்டார்ஸ், இந்துஸ்தான் யுனிலீவர், ஓ.என்.ஜி.சி., மகிந்திரா அண்டு மகிந்திரா உள்ளிட்ட 13 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்து காணப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|