பதிவு செய்த நாள்
14 அக்2012
00:38
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்ந்து வருவதால், வைர ஏற்றுமதியாளர்களின் பார்வை, உள்நாட்டு சந்தையின் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, 49.16 ரூபாயாக இருந்தது. இது, நடப்பு 2012ம் ஆண்டு, ஜூன் மாதம், 57 ரூபாய் என்ற அளவை எட்டியது.
இருந்தபோதிலும், அண்மைக்காலமாக, ரூபாயின் வெளி மதிப்பு உயர்ந்து வருகிறது. வெள்ளியன்று, அன்னியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, 52.82 ஆக இருந்தது.செலவினம் ரூபாய் மதிப்பு சரிந்திருக்கும் சூழலில், ஏற்றுமதி கவர்ச்சிகரமானதாக உள்ளது. எனினும், டாலர் மதிப்பில், மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும்போது, செலவினம் அதிகரிப்பதால், பெரிய அளவில் லாபம் ஈட்ட இயலாத நிலை உள்ளது என, நவரத்தின கற்கள் ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் முதல், நடப்பாண்டு ஜூன் மாதம் வரை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, சராசரியாக, ஏழு ரூபாய் வரை சரிவடைந்திருந்தது.குறிப்பாக, நடப்பு நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, 55-56 ஆக இருந்தது."இதனால், கச்சா வைரங்கள் இறக்குமதிக்கான செலவினம் மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்களின் ஏற்றுமதி மீதான வருவாய் அடிப்படையிலான நிகர லாபம், மிகவும் குறைவாகவே இருந்தது' என, சூரத் வைர வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் தினேஷ் நவாடியா தெரிவித்தார்.இதையடுத்து, வைர வியாபாரிகள், ஏற்றுமதியை குறைத்துக் கொண்டு, உள்நாட்டு சந்தையில் விற்பனையை அதிகரிக்க, தீவிரம் காட்டி வருகின்றனர் என, அவர் மேலும் கூறினார்.
பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் சென்ற ஏப்ரல் முதல் நாட்டின் வைர ஏற்றுமதி குறைந்து வருகிறது. சென்ற ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், வெட்டப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி, 1.34 "காரட்'டாக குறைந்துஉள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், 2.47 "காரட்'டாக இருந்தது."உள்நாட்டில் புதிய சந்தைகளும், நுகர்வோர் பிரிவுகளும் உருவாகி வருகின்றன. இதையடுத்து, உள்நாட்டில் வைரங்களுக்கான தேவை, சென்ற நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டில், 15-20 சதவீதம் உயரும்' என, வைரக் கற்கள் வல்லுனர் பிரவின் நானாவதி தெரிவித்தார்.வர உள்ள தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில், உள்நாட்டில் வைர ஆபரணங்களின் விற்பனை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.2 லட்சம் கோடியை தாண்டும் : நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 4,000 கோடி டாலரை (2.20 லட்சம் கோடி ரூபாய்) எட்டும் என, இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டின், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, சென்ற செப்டம்பர் மாதத்தில், 372 கோடி டாலராக (20,460 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின், இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, (433 கோடி டாலர்- 23,815 கோடி ரூபாய்) 14 சதவீதம் குறைவாகும். நாட்டின் மொத்த ஏற்றுமதியில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையின் பங்களிப்பு, 17 சதவீதம் என்ற அளவில் உள்ளது. உள்நாட்டில், இத்துறை வாயிலாக, 15 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களுக்கு, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள், ஹாங்காங் உள்ளிட்டவை முக்கியச் சந்தைகளாகத் திகழ்கின்றன. ஐரோப்பிய நாடுகளில், இவற்றின் தேவை குறைந்துள்ளதால், ஒட்டுமொத்த அளவில் ஆபரணங்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, ஆறு மாத காலத்தில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, சென்ற நிதியாண்டின் இதே காலத்தை விட, 11.7 சதவீதம் குறைந்து, 1,990 கோடி டாலராக (1.09 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்தியாவின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 4,300 கோடி டாலர் (2.36 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|