பதிவு செய்த நாள்
17 அக்2012
00:59
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்க் கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், லாப நோக்கம் கருதி, முதலீட்டாளர்கள் அதிகளவில், பங்குகளை விற்பனை செய்ததால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.ஜெர்மனியில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்ற மதிப்பீட்டால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், உலோகம், பொறியியல் பொருட்கள், மின்சாரம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தம் முடியும் போது, 135.85 புள்ளிகள் சரிவடைந்து, 18,577.70 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,801.10 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,549.28 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள்,டாட்டா மோட்டார்ஸ், கெயில், எச்.யு.எல்., உள்ளிட்ட 9 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், மாருதி சுசூகி, பார்தி ஏர்டெல், டி.சி.எஸ்., உள்ளிட்ட 21 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் காணப்பட்டது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 39.25 புள்ளிகள் குறைந்து, 5,648 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,714 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,635.60 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' நிறுவனங்களில் எப்.ஐ.ஐ., பங்கு மூலதனம் உயர்வு : நடப்பு நிதியாண்டின், செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 17 நிறுவனங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள் (எப்.ஐ.ஐ.,), பங்கு மூலதனத்தை அதிகரித்து கொண்டுள்ளன."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், மேற்கண்ட 30 நிறுவனங்களுள், 19 நிறுவனங்கள், அவற்றின் பங்கு மூலதனம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளன.இவற்றுள், எச்.டீ.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க்., இன்போசிஸ் உள்ளிட்ட, 17 நிறுவனங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள், கணக்கீட்டு காலாண்டில், பங்கு மூலதனத்தை அதிகரித்து கொண்டுள்ளன.அதேசமயம், கோல் இந்தியா மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய இரு நிறுவனங்களில், பங்கு மூலதனத்தை குறைத்து கொண்டுள்ளன.
மத்திய அரசு, அன்னிய முதலீட்டை கவரும் வகையில், பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது. இதையடுத்து, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களில், அவற்றின் பங்கு மூலதனத்தை உயர்த்தி கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.கணக்கீட்டு காலாண்டில், எப்.ஐ.ஐ.,கள், கெயில், ஜிந்தால் ஸ்டீல் அண்டு பவர், பீ.எச்.இ.எல்., இந்துஸ்தான் யுனிலீவர், லார்சன் அண்டு டூப்ரோ, எச்.டீ.எப்.சி. பேங்க் ஆகியவற்றிலும், பங்கு மூலதனத்தை உயர்த்தி கொண்டுள்ளன.கணக்கீட்டு காலாண்டில், வீட்டு வசதிக்கு நிதியுதவி வழங்கி வரும் எச்.டீ.எப்.சி., நிறுவனத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், பங்கு மூலதனத்தை, 66.74 சதவீதத்தில் இருந்து, 68.72 சதவீதமாக உயர்த்தி கொண்டுள்ளன.இதேபோன்று, ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்கில், அன்னிய நிதி நிறுவனங்கள், அவற்றின் பங்கு மூலதனத்தை, 1.55 சதவீதம் அதிகரித்து, 36.4 சதவீதமாக உயர்த்தி கொண்டுள்ளன. இன்போசிஸ் நிறுவனத்தில், இந்நிறுவனங்களின் பங்கு மூலதனம், 1.53 சதவீதம் உயர்ந்து, 39.42 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், கணக்கீட்டு காலாண்டில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில், இந்நிறுவனங்களின் பங்கு மூலதனம், 0.87 சதவீதம் குறைந்து, 32.34 சதவீதமாகவும், கோல் இந்தியாவில், 0.03 சதவீதம் குறைந்து, 5.52 சதவீதமாகவும் குறைந்துள்ளது.நடப்பு நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில், நாட்டின் பங்கு வர்த்தகம் நன்கு இருந்ததை அடுத்து, "சென்செக்ஸ்', 1,300 புள்ளிகள் அல்லது 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|