பதிவு செய்த நாள்
18 அக்2012
01:27
பால் பொருட்கள் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை, முழுமையாக நீக்குவது குறித்து, மத்திய கால்நடை துறை பரிசீலித்து வருகிறது.நாட்டின் பால் உற்பத்தி, உள்நாட்டுத் தேவையை விட அதிகரிக்கும் என்ற மதிப்பீட்டால், மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்றுமதிக்கு தடை:உள்நாட்டு பால் துறையை பாதுகாக்கும் பொருட்டு, மத்திய அரசு, சென்ற 2011ம் ஆண்டு, அனைத்து வகையான பால் பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்தது.இதன்படி, கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் உட்பட, அனைத்து வகை பால் பொருட்கள்,மொத்த பால் பவுடர், குழந்தைகளுக்கான பால், கேசின் மற்றும் கேசின் பொருட்கள், பால் பொருட்களை வெண்மையாக்கும் நிறமிகள் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.மேலும், பால்,சர்க்கரை சேர்க்கப்பட்ட அடர்த்தியான கிரீம் மற்றும் இனிப்பளிக்கும் பொருட்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதிக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், பால் பொருட்களின் உற்பத்தி அதிகரித்ததால், சென்ற ஜூன் மாதம், கொழுப்பு நீக்கப்பட்ட பால் பொருட்களின் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடு நீக்கப்பட்டது. தற்போது, மொத்த பால் பவுடர் மற்றும் பால் பொருட்களை வெண்மையாக்கும் நிறமி களின் ஏற்றுமதிக்கும், அனுமதி அளிப்பது குறித்து, மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கால்நடை துறை பரிசீலித்து வருகிறது.
நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் பால் பவுடர் உற்பத்தி, 1.12 லட்சம் டன்னாகவும், தேவை 88 ஆயிரம் டன்னாகவும் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. தேவையை விட, உற்பத்தி அதிகரிக்கும் என்பதால், மொத்த பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப் படும் என, தெரிகிறது.
பால் உற்பத்தி:உலகளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த 1995-96ம் நிதியாண்டில், நாட்டின் பால் உற்பத்தி 6.62 கோடி டன்னாக இருந்தது. இது, கடந்த 2010-11ம் நிதியாண்டில், 12.18 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.கடந்த 2000-01 முதல் 2010-11ம் நிதியாண்டு வரை, நாட்டின் பால் உற்பத்தி, சராசரியாக, 4 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
தமிழகம்:இந்தியாவில், தமிழகம், உத்தரபிரதேசம்,ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் மேற்குவங்க மாநிலங்கள், அதிக அளவில் பசும் பால் உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றன.எருமைப் பால் உற்பத்தியில், பஞ்சாப்,குஜராத், ஆந்திரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.இந்தியாவில், பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி, கடந்த 2011-12ம் நிதியாண்டில், 15.3 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.
இவற்றுக்கான தேவை, வரும் 2016ம் ஆண்டில், 15.50 கோடி டன்னாகவும், 2022ம் ஆண்டில், 21 கோடி டன்னாகவும் வளர்ச்சி காணும் என, தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியம் மதிப்பிட்டுள்ளது.இதை கருத்தில் கொண்டு, இவ்வாரியம், 17,300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தேசிய பால் பண்ணை திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதன்படி, முதற்கட்டமாக, 14 மாநிலங்களில், பால் உற்பத்தியை அதிகரிக்க, 2,242 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பங்களிப்பு:உள்நாட்டில் கறவை மாடுகளின் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகள், சுலபமாக அமைப்பு சார்ந்த பால் பதப்படுத்தும் வசதிகளைப் பெறவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவில், தனியார் துறையின் பால் பதப்படுத்தும் திறன், 5.71 கோடி டன்னாக உள்ளது. இது, கூட்டுறவு சங்கங்களில், 3.72 கோடி டன்னாக உள்ளது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|