பதிவு செய்த நாள்
19 அக்2012
01:13
-பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து- மத்திய அரசின் உணவு மானியம், ஆறு மாதங்களுக்குள்ளாகவே, நடப்பு 2012-13ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டை விட உயர்ந்துள்ளது. இது, முழு நிதியாண்டிற்குள், எரிபொருள் மானியச் செலவை விட விஞ்சும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பொது வினி@யாக திட்டம் மத்திய அரசு, விவசாயிகளிடம் இருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்து, அவற்றை குறைந்த விலையில், பொது வினியோக திட்டம் மூலம், மக்களுக்கு வழங்கி வருகிறது.இதன்படி, நடப்பு 2012-13ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், உணவு மானியச் செலவு, 75 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், சென்ற ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, முதல் அரையாண்டில், உணவு மானியம், 1,01,879 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, முழு நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டை விட, 36 சதவீதம் அதிகமாகும்.மத்திய அரசு, தற்போதைய நிலவரப்படி, உணவு மானியத்திற்காக, 61,978 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.விவசாயிகளின் நலன் கருதி, மத்திய அரசு, உணவு தானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியுள்ளது. இதனால், உணவு தானியங்களின் கொள்முதல் செலவு உயர்ந்துள்ளதாக, பொதுத் துறையை சேர்ந்த இந்திய உணவுக் கழக (எப்.சி.ஐ.,) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மேலும், எப்.சி.ஐ., கிடங்குகளில், உணவு தானியங்களின் கையிருப்பு அதிகரித்துள்ளதாலும், கடந்த நிதியாண்டில் நிலுவையில் உள்ள மானியம் காரணமாகவும், உணவு தானிய மானியச் சுமை அதிகரித்துள்ளதாக, அவர் மேலும் கூறினார்.தற்போது, மதிப்பிடப்பட்டுள்ள, 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான உணவு மானியத்தில், கடந்த நிதியாண்டின் மானிய நிலுவைத் தொகை 22,008 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு நிதியாண்டில், உணவு மானிய நிலுவை, 39,909 கோடி ரூபாயாக உயரும் என, எப்.சி.ஐ., மதிப்பிட்டுள்ளது.மத்திய அரசு, நடப்பு நிதி ஆண்டிற்கு, கடந்த நிதியாண்டை விட, கூடுதலாக 15 சதவீத நெல்லை கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகிய பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியத்தை விட, உணவு மானியச் சுமை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.எண்ணெய் நிறுவனங்கள், அடக்க விலைக்கும் குறைவாக பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்வதால், நடப்பு நிதியாண்டில், 1,67,415 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசின் மானியம், 43,800 கோடி ரூபாயாக இருக்கும் என, முன்பு கணிக்கப்பட்டிருந்தது.ஆனால், இந்த மதிப்பீட்டை விட, மத்திய அரசின் மானியச் சுமை உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு, நடப்பாண்டில் ஒதுக்கிய, 43,800 கோடி ரூபாய், கடந்த நிதியாண்டின், மானிய நிலுவையை தீர்க்க, பயன்பட்டுள்ளது.கிடங்கு வசதிஇந்நிலையில், போதுமான கிடங்கு வசதியின்றி, உணவு தானியங்கள் வீணாவதை தடுக்கவும், அவற்றின் கொள்முதல் அதிகரித்து வருவதால், கையிருப்பை குறைக்கவும், மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதையடுத்து, வரும் டிசம்பருக்குள், ஈரானுக்கு இரண்டு லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|