பதிவு செய்த நாள்
26 அக்2012
00:51
புதுடில்லி: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் மேற்கொண்ட 27 நாள் வேலை நிறுத்தம் நேற்று முடிவிற்கு வந்தது. ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, நான்கு மாத ஊதிய நிலுவையை வழங்குவதாக, கிங்பிஷர் நிர்வாகம், உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், கடும் நிதி நெருக்கடியால், அதன் ஊழியர்களுக்கு ஏழு மாத ஊதியத்தை வழங்காமல் இழுத்தடித்து வந்தது.இதையடுத்து, ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி, இந்நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் ஊழியர்கள் சென்ற செப்டம்பர் 29ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.பல கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில், மூன்று மாத ஊதியம் வழங்க, நிறுவனம் முன்வந்தது.ஆனால், இதை நிராகரித்த, 90 சதவீத பணியாளர்கள், வெள்ளிக்கிழமை (இன்று)ஆறு மணிக்குள் நான்கு மாத ஊதியத்தை வழங்கினால் மட்டுமே, வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படும் என, அறிவித்தனர்.இந்நிலையில், நேற்று விமானிகள் மற்றும் பொறியாளர்கள் இடையே, நிர்வாக தரப்பில் தனித்தனியாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டது.இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் அகர்வால், "நிறுவனம் நான்கு மாத ஊதியம் வழங்க முன்வந்ததை அடுத்து, பணியாளர்கள், இன்று முதல் (நேற்று) பணிக்கு திரும்புவார்கள்' என தெரிவித்தார்.விஜய்மல்லையாவை பங்குதாரராக கொண்ட, "பார்முலா ஒன்' கார் பந்தையம் நாளை நொய்டாவில் துவங்குகிறது. அப்போது, கிங்பிஷர் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இதை விரும்பாத விஜய்மல்லையா, ஒரு படி இறங்கி வந்து, ஊழியர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.முன்னதாக, விமான போக்குவரத்து அமைச்சர் அஜீத்சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். அதை விட, நிறுவனம் நிதியாதார உறுதிமொழியையும், விமான சேவை விவரங்களையும் விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு அளிக்க வேண்டியது முக்கியமாகும்.விமான கட்டுப்பாட்டு ஆணையம் உட்பட பல நிறுவனங்களுக்கு, கிங்பிஷர் பெரும் தொகையை பாக்கி வைத்துள்ளது. விமான சேவையை மீண்டும் தொடங்குவது என்பது, விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் திருப்தியை பொறுத்துள்ளது.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|