பதிவு செய்த நாள்
26 அக்2012
00:53
புதுடில்லி : இந்திய ஆயத்த ஆடை நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் அதிகரித்து வரும் போட்டியை சமாளிக்க முடியாமல், புதிய நாடுகளில் வர்த்தக வாய்ப்புகளை கண்டறியத் தொடங்கியுள்ளன.நாட்டின், ஆயத்த ஆடை ஏற்றுமதியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு, 65 சதவீதமாக உள்ளது. ஆனால், மேற்கண்ட நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால், அவற்றுக்கான இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி சரிவடைந்துள்ளது.இந்தியாவுடன் ஒப்பிடும் போது, சீனா, வங்கதேசம், வியட்னாம் போன்ற நாடுகள் ஏற்றுமதி செய்யும் ஆயத்த ஆடைகளின் விலை குறைவாக உள்ளது.
சிக்கனத்தை கடைபிடிக்கத் துவங்கியுள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாட்டினர், குறைந்த விலையில் கிடைக்கும் ஆடைகளை அதிக அளவில் வாங்கி வருகின்றனர்.இதையடுத்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கான இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி குறைந்துள்ளது. நடப்பு காலண்டர் ஆண்டின், முதல் ஏழு மாதங்களில், அமெரிக்காவிற்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி 10.6 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்து, 194 கோடி டாலராக குறைந்துள்ளது.இதனால், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆடைகள் உற்பத்தி மையமாக, திருப்பூர் விளங்குகிறது. இங்கிருந்து ஆண்டுக்கு 12,500 கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி வகைகள் ஏற்றுமதியாகின்றன. சென்ற ஜூன் வரையிலான அரையாண்டு காலத்தில், 6,000 கோடி ரூபாய் அளவிற்கு ஜவுளி ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த மூன்றாண்டுகளாகவே, இத்துறையின் ஏற்றுமதி, வளர்ச்சி மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது.இத்தகைய சூழலில், பாரம்பரிய சந்தைகளான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை மட்டும் சார்ந்திராமல், புதிய சந்தைகளில் வர்த்தக வாய்ப்புகளை கண்டறிய வேண்டிய நிலைக்கு ஜவுளி துறை தள்ளப்பட்டுள்ளது.இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள், டென்மார்க், ஸ்வீடன், ரஷ்யா, தென் ஆப்ரிக்கா, ஜப்பான், இஸ்ரேல், நார்வே போன்ற புதிய சந்தைகளில் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.புதிய சந்தைகளை கண்டறிவதும், வர்த்தகத்தை துவக்கி, வெற்றிகரமாக நடத்துவதென்பது மிகவும் கடினமானது என, ஜவுளி துறையை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.இருந்தபோதிலும், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு குழுவின் ஆதரவுடன், இந்திய ஜவுளித் துறையினர், புதிய சந்தைகளில் வர்த்தகத்தை துவக்கி விரிவுபடுத்தி வருகின்றனர்.
தற்போது, புதிய சந்தைகளில் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியின் பங்களிப்பு 24 சதவீதமாக உள்ளது. இது, வரும் ஆண்டுகளில் மேலும் 10 சதவீத வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்த இலக்கை எட்டும் நோக்குடன், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு குழு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நடப்பு நிதியாண்டில், 1,800 கோடி டாலர் மதிப்பிற்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேற்கொள்ள, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.அமெரிக்க பொருளாதாரம், சரிவில் இருந்து மீண்டு வருவதற்கான அறிகுறி தென்படுகிறது. ஆனால், ஐரோப்பியாவில் இன்னும் நெருக்கடி நீடிக்கிறது. இதனால், புதிய சந்தைகள் கைகொடுத்தால் மட்டுமே, ஜவுளி ஏற்றுமதி இலக்கை எட்ட வாய்ப்புள்ளது.இந்திய ஆயத்த ஆடை நிறுவனங்கள், உற்பத்தி திறனை அதிகரித்து, செலவினங்களை குறைக்கும்பட்சத்தில், சர்வதேச சந்தையில் சீனா, வங்கதேசம், வியட்னாம் போன்ற நாடுகளின் போட்டியை சமாளிக்க முடியும். அதே சமயம், புதிய சந்தைகளின் மூலம், பாரம்பரிய சந்தைகளில் இழக்கும் வர்த்தகத்தை ஈடு செய்து கொள்ள முடியும்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|