பதிவு செய்த நாள்
26 அக்2012
10:56
புதுடில்லி:பெட்ரோல், 'பங்க்' டீலர்களுக்கான, கமிஷனை அதிகரிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதனால், பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 30 காசும், டீசல் விலை, லிட்டருக்கு, 18 காசும் உயர்கிறது. பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, இதுதொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டதும், விலை உயர்வு அமலுக்கு வந்து விடும்.பெட்ரோல் மீதான விலை நிர்வாக கட்டுப்பாட்டு முறையை, மத்திய அரசு வாபஸ் பெற்றது முதல், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், பெட்ரோல் விலையை, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.
இந்நிலையில், பெட்ரோல் பங்க் டீலர்கள், தங்களுக்கான கமிஷனை உயர்த்த வேண்டும் என, மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தை கேட்டு வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள, மத்திய பெட்ரோலிய அமைச்சகம், நேற்று முடிவு செய்தது.இதையடுத்து, பெட்ரோலுக்கு லிட்டர் ஒன்றுக்கு, 1.49 ரூபாய் என்ற அளவில் வழங்கப்பட்டு வந்த கமிஷனை, 1.79 ரூபாயாகவும், டீசலுக்கு லிட்டருக்கு, 91 காசு என்ற அளவில் வழங்கி வந்த கமிஷனை, 1.09 ரூபாயாகவும் உயர்த்த தீர்மானித்தது. அதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 30 காசும், டீசல் விலை லிட்டருக்கு, 18 காசும் உயர்கிறது. கமிஷனை உயர்த்துவதற்குஅனுமதி வழங்கியது தொடர்பான கடிதத்தை,மத்திய பெட்ரோலிய அமைச்சகம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்ததும், விலை உயர்வு அமலுக்கு வந்து விடும். சென்னையில், இனி பெட்ரோல் விலை லிட்டருக்கு, 71.78 ஆக இருக்கும். டீசல் விலை லிட்டருக்கு, 50.16 ரூபாய்க்கு விற்கப்படும்.பெட்ரோல் பங்க் டீலர்களுக்கான கமிஷன், இதற்கு முன், 2011ம் ஆண்டில் உயர்த்தப்பட்டது. அப்போது, பெட்ரோலுக்கான கமிஷன், 28 பைசாவும், டீசலுக்கான கமிஷன், 15 பைசாவும் உயர்த்தப்பட்டது.
இதுதொடர்பாக, அகில இந்திய பெட்ரோலியம் வர்த்தகர்கள் சங்க பொதுச் செயலர், அஜய் பன்சால் கூறியதாவது:பெட்ரோலுக்கான கமிஷனை, லிட்டருக்கு, 67 காசு உயர்த்த வேண்டும்; டீசலுக்கான கமிஷனை, 42 காசு உயர்த்த வேண்டும் என, கோரிக்கை விடுத்தோம்.பெட்ரோல்பங்க்களை இயக்குவதற்கான செலவு அதிகரித்துள்ளதால், இப்படி கோரினோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததை விட, குறைவாகவே, கமிஷன் உயர்த்தப்பட்டுள்ளது.இவ்வாறு அஜய் பன்சால் கூறினார்.சமையல் காஸ் வினியோகஸ்தர்களுக்கான கமிஷனை, இம்மாத முற்பகுதியில், மத்திய அரசு உயர்த்தியது. சிலிண்டர் ஒன்றுக்கான கமிஷனை, 25.83 ரூபாயிலிருந்து, 37.25 ரூபாயாக, அதாவது, 11.42 ரூபாய் உயர்த்தியது. அதனால், சிலிண்டர் விலை, 399 ரூபாயிலிருந்து, 410.42 ரூபாயாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|