பதிவு செய்த நாள்
27 அக்2012
00:55
கோல்கட்டா: நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில், நாட்டின் சமையல் எண்ணெய் இறக்குமதி, 1 கோடி டன்னை எட்டும் என, இந்திய சமையல் எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. உள்நாட்டில், சமையல் எண்ணெய் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, எண்ணெய் உற்பத்தி இல்லாததால், நம் நாட்டின் சமையல் எண்ணெய் இறக்குமதி, ஒவ்வொரு ஆண்டும், படிப்படியாக அதிகரித்து வருகிறது.எண்ணெய் சந்தைப்படுத்தும் பருவம் என்பது, நவம்பர் முதல் அக்டோபர் வரை கணக்கிடப்படுகிறது.இவ்வகையில், நடப்பு எண்ணெய் பருவத்தில், நவம்பர் முதல் செப்டம்பர் வரையிலான, 11 மாத காலத்தில், நாட்டின் சமையல் எண்ணெய் இறக்குமதி, 89.60 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.இதையடுத்து, நடப்பு முழு எண்ணெய் சந்தைப்படுத்தும் பருவத்தில், நாட்டின் சமையல் எண்ணெய் இறக்குமதி, 1 கோடி டன்னை எட்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.பொதுவாக, நம் நாட்டில், சமையல் எண்ணெய் உற்பத்தி, தேவையை விட குறைவாகவே உள்ளது. இந்நிலையில், அண்மையில் முடிவுற்ற கரீப் பருவத்தில் (ஜூலை-செப்டம்பர்), நாட்டின் பல மாநிலங்களில், கால தாமத மழைப் பொழிவால், எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது.இதனால், ஒட்டுமொத்த அளவில், சமையல் எண்ணெய் உற்பத்தி குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதை ஈடுசெய்யும் வகையில், இதன் இறக்குமதி அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.நடப்பு எண்ணெய் பருவத்தில் மட்டுமின்றி, எதிர் வரும் பருவத்திலும், இதன் இறக்குமதி மேலும் அதிகரிக்கும் என, இத்துறையை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு எண்ணெய் பருவத்தின், முதல், 11 மாத காலத்தில், நாட்டின் சமையல் எண்ணெய் இறக்குமதி, 74.90 லட்சம் டன்னாக இருந்தது.இதனுடன் ஒப்பிடும் போது, நடப்பு பருவத்தின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்டஇறக்குமதி, (89.60 லட்சம் டன்) 19.6 சதவீதம் அதிகம் என, இந்த கூட்டமைப்பின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதியில்,
சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலின் பங்களிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இதையடுத்து, சூரிய காந்தி எண்ணெய் மற்றும் சோயா எண்ணெயின் பங்களிப்பு உள்ளன.கடந்த 2008-09ம் எண்ணெய் சந்தைப்படுத்தும் பருவத்தில், நாட்டின் மொத்த எண்ணெய் தேவையில், இறக்குமதியின் பங்களிப்பு, 49 சதவீதமாக இருந்தது.இது, நடப்பு பருவத்தில், 57 சதவீதமாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில், சமையல் எண்ணெய் தேவையில், இறக்குமதியின் பங்களிப்பு, 55 சதவீதம் என்ற அளவில் உள்ளது என, இந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.நம் நாடு, இந்தோனேஷியா, மலேசியா, பிரேசில், அமெரிக்கா மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் இருந்து, சமையல் எண்ணெய் வகைகளை இறக்குமதி செய்து கொள்கிறது.இதில், இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து, பாமாயில் அதிகளவில் இறக்குமதி செய்து கொள்ளப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|