பதிவு செய்த நாள்
31 அக்2012
02:20
மும்பை: ரிசர்வ் வங்கியின் கவர்னர் டீ.சுப்பாராவ், இரண்டாவது காலாண்டு நிதி ஆய்வு கொள்கையை நேற்று அறிவித்தார். இதில், வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம், 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 4.50 சதவீதத்திலிருந்து, 4.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
நாட்டின், தொழில் துறை உற்பத்தியில் சுணக்க நிலை நிலவி வருகிறது. எனவே, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், வங்கிகளுக்கான, 'ரெப்போ' வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும் என, தொழில் துறையினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால், நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து அதிகமாக உள்ளதால், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான, 'ரெப்போ' வட்டி விகிதங்களை குறைக்கவில்லை.அதேசமயம், வங்கிகள் திரட்டும் மொத்த டெபாசிட்டில், குறிப்பிட்ட தொகையை, ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டிய, ரொக்க இருப்பு விகிதம், 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கிகளின் புழக்கத்திற்கு கூடுதலாக, 17,500 கோடி ரூபாய் கிடைக்கும் என, எதிபார்க்கப்படுகிறது. குறைக்கப்பட்டுள்ள ரொக்க இருப்பு விகிதம், நவம்பர் மாதம், 3ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக, சுப்பாராவ்
தெரிவித்தார்.குறைந்த கால அடிப்படையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம், (ரெப்போ ரேட்), 8 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதில், எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அதேபோன்று, ரிசர்வ் வங்கி, வங்கிகளிடமிருந்து பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ ரேட்), 7 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
இதிலும், எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.நடப்பு 2012-13ம் நிதியாண்டின், பொருளாதார வளர்ச்சி, 5.8 சதவீதமாக இருக்கும் என, ரிசர்வ் வங்கி மறு மதிப்பீடு செய்துள்ளது. இது, 6.5 சதவீதமாக இருக்கும் என, முதல் மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று, நடப்பு நிதியாண்டின் இறுதியில், நாட்டின் பணவீக்கம், 7.5 சதவீதமாக இருக்கும் என, மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது, முதல் மதிப்பீட்டில், 7 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.மத்திய அரசு, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.
குறிப்பாக, அன்னிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் வகையில், பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது. மேலும், நிதிப் பற்றாக்குறையை குறைக்கும் வகையில், டீசல் விலையை உயர்த்தியதுடன், சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்பாட்டிலும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.நடப்பு கணக்கு மற்றும் நிதிப் பற்றாக்குறையை குறைக்கும் நோக்கிலும், முதலீடுகளை அதிக அளவில் கவரும் வகையிலும், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், நேற்று முன்தினம் ஐந்தாண்டு நிதி ஒருங்கிணைப்பு திட்டத்தை அறிவித்தார். இதன் மூலம், வரும் ஆண்டுகளில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்பதுடன், பணவீக்கமும் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் நிதிப் பற்றாக்குறை, 5.1 சதவீதமாக இருக்கும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இது, நாட்டின் மொத்த உள்நாட்டு உ ற்பத்தியில், 5.3 சதவீதமாக இருக்கும் என, நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காலையில், பங்கு வர்த்தகம் தொடங்கிய போது, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'சென்செக்ஸ்' சற்று அதிகரித்திருந்தது. ஆனால், ரிசர்வ் வங்கியின் கவர்னர், நிதி ஆய்வு கொள்கையை அறிவித்த பிறகு, வர்த்தகம் சுணக்கம் கண்டது. 'ரெப்போ' வட்டி விகிதங்கள் குறைக்கப்படாததே, பங்குச் சந்தையின் சரிவு நிலைக்கு காரணம் என, ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|