பதிவு செய்த நாள்
01 நவ2012
01:34
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம் புதன் கிழமையன்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததை அடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. ஏர் பிரான்ஸ் - கே.எல்.எம் மற்றும் டச்சு லுப்தான்ஸா - ஏ.ஜி ஆகிய நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், சந்தை மதிப்பீட்டை காட்டிலும் சிறப்பாக இருந்தன.
இதையடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம், நன்கு இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ஆரோக்கிய பராமரிப்பு, மோட்டார் வாகனம், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், பொறியியல், எண்ணெய், எரிவாயு மற்றும் நுகர் பொருட்கள் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 74.53 புள்ளிகள் அதிகரித்து, 18,505.38 புள்ளிகளில் நிலைபெற்றது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,521.62 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,398.48 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், ஹிண்டால்கோ, டாட்டா மோட்டார்ஸ், சிப்லா உள்ளிட்ட 19 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், ஓ.என்.ஜி.சி., கெயில், எல் அண்டு டி உள்ளிட்ட 11 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் காணப்பட்டது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 21.80 புள்ளிகள் உயர்ந்து, 5,619.70 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,624.40 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,583.05 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|