பதிவு செய்த நாள்
02 நவ2012
03:31
நாமக்கல்: தமிழக முட்டை மற்றும் கோழிகளை ஏற்றிச் செல்லும் லாரிகள், கேரளாவுக்குள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடை, நான்காம் நாளாக நீடிப்பதால், நாமக்கல்லில், பல கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. அதனால், முட்டை மற்றும் இறைச்சிக் கோழியின் விலை சரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே ஹெசர்பெட்டாவில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில், பறவைக் காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளது. அந்நோய் தாக்கத்தால், 3,400 வான் கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. அதனால், கர்நாடக மாநிலத்தில் இருந்து, கேரளாவுக்கு செல்லும் முட்டை மற்றும் கோழிகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் அனைத்தும், அம்மாநில எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
அதுபோல், தமிழக முட்டை மற்றும் கோழிகளுக்கும், கேரளா மாநில அரசு, கடந்த, 29ம் தேதி தடை விதித்தது. அதனால், தமிழகத்தில் இருந்து, கேரளாவுக்குச் செல்லும் முட்டை லாரிகள் அனைத்தும், நான்கு நாட்களாக, கேரள மாநில எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
அதனால், பலகோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. அதுபோல், லட்கணக்கான முட்டைக் கோழி, கறிக்கோழியும் தேக்கமடைந்துள்ளன. அதன் எதிரொலியாக, தமிழகத்தில், முட்டை மற்றும் முட்டைக் கோழி, கறிக்கோழி விலை சரியும் சூழல் உருவாகியுள்ளது.
இதனிடையே, "தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில், பறவைக் காய்ச்சல் இல்லை. எனவே, தமிழக முட்டை, முட்டைக் கோழி, கறிக்கோழி ஆகியவற்றை ஏற்றி வரும் லாரிகளை, கேரளாவுக்குள் செல்ல, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் நலச்சங்கத் தலைவர் நல்லதம்பி கூறியதாவது: தமிழக கால்நடை பராமரிப்புதுறை செயலர் மூலம் கேரள மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கால்நடை மருத்துவர் களிடம் சான்றிதழ் பெற்று வரும் முட்டை லாரிகள் அனுமதிக்கப்படும் என, அம்மாநில கால்நடை பராமரிப்புத் துறை செயலர் தெரிவித்தாக கூறப்படுகிறது. எனினும், அம்மாநில அரசு உத்தரவு தங்களுக்கு வரவில்லை எனக்கூறி, கேரள சோதனை சாவடிகளில், தமிழக முட்டை லாரிகள் அனுமதிக்கப்படாமல், அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். கோழி கறி விலை, சேலம், ஈரோட்டில் கிலோவுக்கு, 35 ரூபாய் வரை சரிவடைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|