பதிவு செய்த நாள்
02 நவ2012
03:35
புதுடில்லி: அடிப்படை கட்டமைப்பு துறையில், 1 லட்சம் கோடி டாலர் முதலீட்டு இலக்கை எட்ட, அரசு பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என, பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட பிறகு, நேற்று டில்லியில், பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மத்திய அரசின் செயல் திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து பிரதமர் பேசினார். அதன் விவரம் வருமாறு: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கடந்த ஒன்பது ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், "ஆதார்' திட்டம் என, சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கான பல்வேறு கொள்கை திட்டங்களை வகுத்து செயல்
படுத்தி வருகிறது. இது, சீரிய பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டு, சமூகத்தின் செலவிடும் திறனை உயர்த்தியுள்ளது. இத்தகைய வெற்றிகளுக்கு நாம் நியாயப்படி பெருமைப்பட்டுக் கொண்டாலும், சர்வதேச பொருளாதார நெருக்கடியால் நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பையும் உணர வேண்டும். இதனால், நமது வளர்ச்சி குன்றியுள்ளது. ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. நாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. குறிப்பாக, மிகவும் அதிகரித்துள்ள நிதிப்பற்றாக்குறை, கவலை அளிக்கக்கூடியதாகவும், உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு தடையாகவும் உள்ளது. நமது எதிர்கால வளர்ச்சி குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. நம் முன் உள்ள சவால்களை மிகுந்த வலிமையோடு சமாளித்து, இலக்கை அடைய வேண்டும். நாட்டை கட்டிக்காப்பதில் நமக்கும் பங்குண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
நம் முன் உள்ள சிக்கலான பிரச்னைகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காண்பதற்கான செயல் திட்டங்களை வகுக்க வேண்டும். 12வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ், அடிப்படை கட்டமைப்பு துறையில் 1 லட்சம் கோடி டாலர் (55 லட்சம் கோடி ரூபாய்) முதலீடு மேற்கொள்ள, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த முதலீடுகளுக்கு பல்வேறு பிரச்னைகள் தடையாக உள்ளன. குறிப்பாக, எரிபொருள் வினியோகம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி, நிதி போன்றவற்றை கூறலாம்.
எரிபொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதுவே, நமது முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக உள்ளது. நிர்ணயித்த இலக்கை அடைய, நாம் துணிவோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் செயல்படுவோம். இந்த அரசுக்கு உள்ள காலத்திற்குள், ஒவ்வொருவரும், முடிக்கப்படாத பணிகளை விரைந்து முடிக்க தீவிரமாக செயல்படுவார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஆற்றல்மிக்க, இளைஞர்களுக்கு, மூத்த அமைச்சர்கள் பணிகளை ஒதுக்கித் தர வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|