பதிவு செய்த நாள்
11 நவ2012
02:43
சேலம்: தமிழகத்தில், மின்தடை காரணமாக, அரிசி உற்பத்தி குறைந்துள்ளதால், அதன் விலை, குவிண்டாலுக்கு, 200 ரூபாய் வரை, உயர்ந்துள்ளது.தமிழகத்தில், நெல்லுக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், நெல்லுக்கான கொள்முதல் விலையை, அரசு உயர்த்தியதன் எதிரொலியாக, அரிசி விலை உச்சத்தை எட்டி உள்ளது.தமிழக அரசு, கடந்த மாதம், ஒரு குவிண்டால் சாதாரண நெல்லுக்கு, 50 ரூபாயும், சன்னரக நெல்லுக்கு, 70 ரூபாயும் கூடுதலாக வழங்கப்படும் என, அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பின், சாதாரண நெல்லின் கொள்முதல் விலை, 1,300 ரூபாயாகவும், சன்னரக நெல்லின் கொள்முதல் விலை, 1,350 ரூபாயாகவும் இருந்தது.
நெல் விலை உயர்ந்த நிலையில், அரிசி விலை, தற்போது அதிகரித்து வருகிறது. அது மட்டுமின்றி, மின்தடை காரணமாக, தமிழகத்தில் அரிசி உற்பத்தியில் ஈடுபட்டு வந்த, 7,332 அரிசி ஆலைகளில், 25 சதவீத ஆலைகளில் மட்டுமே உற்பத்தி நடக்கிறது.அந்த ஆலைகளும் மின்சாரத்துக்கு மாற்றாக, டீசலை பயன் படுத்தி, ஜெனரேட்டர் மூலம் அரிசி உற்பத்தியில் ஈடுபடுவதால், அரிசி விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. வெள்ளை பொன்னி அரிசி பழசு, கிலோ, 49 முதல், 50 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது. பாபத்லா பொன்னி அரிசி விலை, 46 முதல் 48 ரூபாய் வரையும், கர்நாடக பொன்னி அரிசி,43 முதல், 45 ரூபாய் வரையும் அதிகரித்துள்ளது. அரிசி வியாபாரி சதீஷ் கூறியதாவது:தமிழகத்தில், அரிசி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் ஏற்பட்ட, "நீலம்' புயலின் தாக்கம் காரணமாக, காரைக்குடி, வேதாரண்யம், நாகை மாவட்டங்களில் நெற்பயிர் நீரில் மூழ்கியதால், நெல் உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதை அறிந்து கொண்ட வியாபாரிகள், இருப்பு நெல்லை விற்பனைக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர். அது மட்டுமின்றி, மின்தடை காரணமாக அரிசி உற்பத்தியில் ஏற்படும் கூடுதல் செலவை, அரிசி விலையில் ஏற்றுவதால், விலை உயர்ந்துள்ளது.அரிசி விலையை கட்டுப்படுத்தும் வகையில், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் மாநிலங்களில் இருந்து, தமிழக அரசு வரவழைத்துள்ள அரிசிக்கு, மக்களிடம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை. இதன் காரணமாக, தற்போது அரிசி விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|