பதிவு செய்த நாள்
17 நவ2012
00:29
மும்பை:
நடப்பு மாதம் 2ம் தேதி வரையிலுமாக, உணவு சாரா துறைகளுக்கு வங்கிகள்
வழங்கிய கடன், 47.56 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த
ஆண்டின் இதே காலம் வரையிலுமாக வழங்கப்பட்ட கடனை விட, 15.87 சதவீதம் அதிகம். இருப்பினும், இது, ரிசர்வ்
வங்கி, நிர்ணயித்துள்ள, 16 சதவீத இலக்கை விட குறைவாகும்.பொதுவாக, ஒரு
நிதியாண்டின் இரண்டாவது ஆறு மாத காலத்தில் தான் வங்கிகள் வழங்கும் கடன்கள்
அதிகரிக்கும்.ஏனெனில், பண்டிகை மற்றும் திருமண காலங்கள் அப்போதுதான்
அதிகமாக இடம்பெறுகின்றன.குறிப்பாக, அக்டோபர் முதல் மார்ச் வரையிலுமாக,
நுகர்வோர் செலவினம் அதிகரிப்பதுடன், நிறுவனங்களும் அதிகளவில் திட்டங்களை
மேற்கொள்ளும். இந்நிலையில், நடப்பு மாதம் 2ம் தேதி வரையிலான இரு
வாரங்களில், வங்கிகள் வழங்கிய கடன், 35 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.
பல வங்கிகள், கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. இதனால், சில்லரை
கடன் வாங்குவது உயர்ந்துள்ளது.ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பீ.ஐ.,),
ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட பல வங்கிகள், கடனுக்கான
வட்டி விகிதங்களை குறைத்துள்ளன. குறிப்பாக, எஸ்.பீ.ஐ., வாகன மற்றும் வீட்டு
கடனுக்கான பரிசீலனை கட்டணத்தை குறைத்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், இனி
வரும் மாதங்களில், வங்கிகளிலிருந்து கடன் பெறுவது அதிகரிக்கும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.நவம்பர் 2ம் தேதி வரையிலுமாக, வங்கிகள் திரட்டிய
டெபாசிட், 13.75 சதவீதம் வளர்ச்சி கண்டு, 64.36 லட்சம் கோடி ரூபாயாக
உயர்ந்துள்ளது. நவம்பர் 2ம் தேதி வரையிலான, இருவார காலத்தில், வங்கிகள்
திரட்டிய டெபாசிட், 47,211 கோடி ரூபாயாக இருந்தது என, ரிசர்வ் வங்கி
வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|