பதிவு செய்த நாள்
17 நவ2012
00:30
திருச்சூர்:
தென் மாநிலங்களில் கொப்பரை வரத்து அதிகரித்துள்ளதால், தேங்காய் எண்ணெய்
விலை சரிவடையும் என, வியாபாரிகள் தெரிவித்துஉள்ளனர்.நாட்டில், தேங்காய்
உற்பத்தியில் கேரளா முதலிடத்தில் உள்ளது. இங்கு, 10.20 லட்சம் ஹெக்டேரில்,
591 கோடி தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தில், 3.20 லட்சம் ஹெக்டேரில், 371 கோடி
தேங்காய்கள் விளைகின்றன. அடுத்த இடங்களில், கர்நாடகா (2.87 லட்சம்
ஹெக்டேர்/149 கோடி தேங்காய்கள்) மற்றும் ஆந்திரா 95 ஆயிரம் ஹெக்டேர்/ 78
கோடி தேங்காய்கள்) ஆகியவை உள்ளன.நாட்டின் ஒட்டுமொத்த தேங்காய்
உற்பத்தியில், மேற்கண்ட நான்கு தென்மாநிலங்களின் பங்களிப்பு, 90.8 சதவீதமாக
உள்ளது.இந்நிலையில், இந்தோனேஷியா மற்றும் மலேசியாவில் பாமாயில் உற்பத்தி
அதிகரிப்பால், அதன் விலை, 21 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், இந்நாடுகளில்
இருந்து இந்தியா மேற்கொண்டு வரும் சமையல் எண்ணெய் இறக்குமதி மெல்ல
அதிகரித்து வருகிறது.கேரளாவை பொறுத்தவரை, தேங்காய் எண்ணெய்க்கான தேவை
குறைந்து, அதற்கு மாற்றாக உள்ள, எண்ணெய் பனை,கொட்டையில் இருந்து
எடுக்கப்படும் எண்ணெய்க்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், தேங்காய்
எண்ணெய் விற்பனையில் தேக்கம் ஏற்பட்டுஉள்ளது.
திருச்சூர் சந்தையில், ஒரு கிலோ தேங்காய் எண்ணெய் விலை, 60 ரூபாயாக உள்ளது. அதே சமயம், காங்கேயத்தில் இருந்து திருச்சூருக்கு கிலோ 57-58 ரூபாய்க்கு,
தேங்காய் எண்ணெய் சப்ளை செய்யப்படுகிறது.ஒரு கிலோ பாமாயில், 59 ரூபாய்க்கு
விற்பனையாகிறது. ஒரு கிலோ பனங்கொட்டை எண்ணெய், 47 ரூபாய்க்கு விற்பனை
செய்யப்படுகிறது. இதனால், பண்டிகை காலத்திலும், தேங்காய் எண்ணெய்க்கான தேவை
குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.மலேசியா மற்றும் இந்தோனேஷியாவில்
இருந்து விலை குறைந்த பாமாயில் இறக்குமதி அதிகரித்துஉள்ளதால், வரும்
வாரங்களில் தேங்காய் எண்ணெய் விலை, மேலும் குறைய வாய்ப்புள்ளதாக அவர்கள்
கூறினர்.நடப்பு எண்ணெய் பருவத்தில் (நவ.,-அக்.,), இந்தியாவின் சமையல்
எண்ணெய் இறக்குமதி, நான்கு சதவீதம் உயர்ந்து, 1 கோடி டன்னுக்கும் மேலாக
அதிகரிக்கும் என, எண்ணெய் உற்பத்தியாளர்கள் மதிப்பிட்டு உள்ளனர்.
எண்ணெய் பனை பயன்பாடு : எண்ணெய் பனையின் பழத்தில் இருந்து எடுக்கப்படும்
பாமாயில், சமையல், தொழிற்சாலை உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
எண்ணெய் பனை பழத்தில் உள்ள கொட்டைக்குள் இருக்கும் பருப்பில், பனை எண்ணெய்
தயாரிக்கப்படுகிறது. இது, கிட்டத்தட்ட தேங்காய் எண்ணெய் போன்று
பயன்படுத்தப்படுகிறது. இதன் விலை, தேங்காய் எண்ணெயை விட, குறைவாக உள்ளது.
இருந்த போதிலும், இதன் பயன்பாடு குறிப்பிட்ட அளவிற்கே உள்ளது.பருப்பு
நீக்கப்பட்ட பின், அதன் ஓடுகள் உலர வைக்கப்பட்டு, சிமென்ட் உள்ளிட்ட
பல்வேறு தொழிற்சாலைகளின் உலைகளில், சுற்றுச்சூழல் மாசற்ற எரிபொருளாக
பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|