பதிவு செய்த நாள்
18 நவ2012
07:06
புதுடில்லி :கோதுமை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், வெளிச்சந்தையில் உடனடியாக 30 லட்சம் டன் கோதுமையை விற்பனை செய்ய இந்திய உணவு கழகம் முடிவு செய்துள்ளது.சென்ற ஜூன் மாதம், பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு (சி.சி.இ.ஏ.,), வெளிச்சந்தையில் 33 லட்சம் டன் கோதுமையை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்தது. இதில் 30 லட்சத்திற்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த வாரம் 65 லட்சம் டன் கோதுமையை வெளிச்சந்தையில் விற்கும் திட்டத்திற்கு சி.சி.இ.ஏ., அனுமதி வழங்கியது. "இதன்படி, முதற்கட்டமாக, 30 லட்சம் டன் கோதுமை விற்பனை செய்யப்படும்' என, இந்திய உணவுக் கழகத்தின் தலைவர் சி.அமர்சிங் தெரிவித்தார்.இமாச்சலப்பிரதேசம் போன்ற சிறிய மாநிலங்களுக்கு, வாரம்தோறும் 25 ஆயிரம் டன்னும், பெரிய மாநிலங்களுக்கு, அதிகபட்சமாக ஒரு லட்சம் டன் கோதுமையும் விற்பனை செய்யப்படும் என, அவர் மேலும் கூறினார்.தற்போது ஒரு குவிண்டால் கோதுமை, 1,700 ரூபாய் என்ற அளவில் உள்ளது. வெளிச்சந்தையில் கோதுமை புழக்கம் அதிகரிக்கும் பட்சத்தில், அதன் விலை கட்டுக்குள் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆண்டு, கோதுமை உற்பத்தி புதிய உச்சத்தை எட்டியதால், மத்திய அரசிடம் கோதுமை கையிருப்பு உபரியாக உள்ளது. சென்ற அக்டோபர் நிலவரப்படி, 4.05 கோடி டன் கோதுமை, மத்திய அரசின் கையிருப்பில் உள்ளது.நடப்பு பருவத்தில் கோதுமை அதிகம் விளையும் வடமாநிலங்களில் அதன் உற்பத்தி குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில், மாவு ஆலைகள் மற்றும் பிஸ்கட் தயாரிப்பு நிறுவனங்களுக்காக, மாநில அரசுகள், 27 லட்சம் டன் கோதுமையை விடுவிக்க வேண்டும் என, இந்திய உணவுக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|