பதிவு செய்த நாள்
19 நவ2012
01:13
சேலம்:
மரவள்ளிக்கிழங்கு வரத்து அதிகரிப்பால், அதன் விலை கடும் சரிவடைந்துள்ளது.
இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.கிழங்கு வகை பயிர்களின் சாகுபடியில்,
மரவள்ளிக் கிழங்கு முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில், எட்டு லட்சம்
ஏக்கரில், மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்படுகிறது. மரவள்ளிக்கிழங்கு உற்பத்தி,
அதிகரித்ததை தொடர்ந்து, தமிழகத்தில், 600க்கும் மேற்பட்ட இடங்களில்,
ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி ஆலைகள் இயங்குகின்றன.வறட்சியை தாங்கி வளரும்
பயிராக இருப்பதால், மானாவாரியில் அதிகம் பயிரிடப்படுகிறது.
குறிப்பாக,
செம்மண் கலந்த மணற்பாங்கான நிலமே, மரவள்ளி பயிருக்கு ஏற்றது.சேலம்,
நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில், மரவள்ளிக்கிழங்கு பயிரிடும்
விவசாயிகள் அதிகம் உள்ளனர். 10 மாத பயிராக இருந்தாலும், உரிய முறையில்
பயிரிட்டால், அதிகளவு லாபம் எதிர்பார்க்கலாம் என, விவசாயிகள் கூறுகின்றனர்.
சேலம் மாவட்டத்தில், சங்ககிரி, வீரபாண்டி, மகுடஞ்சாவடி, வாழப்பாடி,
ஆத்தூர், மாவெலிபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், மரவள்ளிக்கிழங்கு
சாகுபடி அதிகரித்துள்ளது. 10 நாட்களுக்கு ஒரு முறை பயிர்களுக்கு தண்ணீர்
விட்டால் போதும். சில விவசாயிகள், மரவள்ளிக்கிழங்கு பயிர்களின் இடையே,
ஊடுபயிராக, எள், நிலக்கடலை, உளுந்து, பாசிப்பயிறு, சோயா, மொச்சை ஆகியவற்றை
பயிரிடுகின்றனர்.
மரவள்ளிக்கிழங்கு உணவுக்காகவும், ஸ்டார்ச், ஜவ்வரிசி, சேமியா தயாரிப்பதற்கும் பயன்படுகிறது.விலை சரிவு குறித்து, சேலம் மரவள்ளிக்கிழங்கு வியாபாரிகள் கூறியதாவது:கடந்த
மாதம் முதல் மரவள்ளிக்கிழங்கு வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. சென்ற
மாதம், ஒரு கிலோ மரவள்ளிக்கிழங்கு, 25 ரூபாய்க்கு விற்பனையானது.
மரவள்ளிக்கிழங்கு பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்ததால், விலையும்
கூடியது. தற்போது, மரவள்ளிக்கிழங்கு வரத்து திடீரென அதிகரித்து
காணப்படுகிறது.ஒரு கிலோ மரவள்ளிக்கிழங்கு விலை, 10 முதல், 15 ரூபாயாக
சரிவடைந்துள்ளது. பெரும்பாலான வியாபாரிகள், சிப்ஸ் போடுவதற்காக
மரவள்ளிக்கிழங்கை வாங்குகின்றனர். வீட்டில் கிழங்கு மற்றும் பொரியல்
செய்வதற்காக, பெண்கள் மரவள்ளிக்கிழங்குகளை வாங்கிச் செல்கின்றனர்.இவ்வாறு
அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|