பதிவு செய்த நாள்
19 நவ2012
11:56
புதுடில்லி,:வங்கிகளின் வராக்கடன் அளவு, 1.47 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.வங்கிகளில் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் இருப்பது வராக்கடன் (என்.பி.ஏ.,) எனப்படுகிறது. கடந்த நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டில் (2012 - 13), வராக்கடன் பல மடங்கு அதிகரித்து விட்டதாக, 35 வங்கிகள் அறிக்கை தாக்கல் செய்துள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கி, அலகாபாத் வங்கி மற்றும் லட்சுமி விலாஸ் வங்கிகளின் வராக்கடன் அளவு, இதுவரை இல்லாத வகையில், 60 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளன. மிகவும் அதிகபட்சமாக, சவுத் இந்தியன் வங்கியின் வராக்கடன், 86 சதவீதமாக உள்ளது.
பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகளின் வராக்கடன், 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. வராக்கடனால் பாதிக்கப்பட்டுள்ள, 35 வங்கிகளின் மொத்த வராக்கடன், முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 28 சதவீதம் அதிகம்.நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும், 32 ஆயிரம் கோடி ரூபாய் வராக்கடன் ஆகியுள்ளதால், முந்தைய ஆண்டுகளின் வராக்கடனுடன் சேர்க்கும்போது, மொத்தம், 1.47 லட்சம் கோடி ரூபாய் வராக்கடன் உள்ளது.இப்போது தெரிவிக்கப்பட்டுள்ள வராக்கடன், உள்நாட்டு வங்கிகளுக்கானது மட்டும் தான். இதில், வெளிநாட்டு வங்கிகள் மற்றும் பட்டியலிடப்படாத உள்நாட்டு வங்கிகளின் வராக்கடன் அளவு சேர்க்கப்படவில்லை.
நடப்பு நிதியாண்டின் முதல், ஆறு மாதங்களுக்கான வராக்கடன் அளவு, கடந்த நிதியாண்டின் முழுமைக்குமான அளவை விட, அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர்ந்து வரும் வராக்கடனால் வங்கிகள் பல தடுமாறிக் கொண்டிருக்கையில், "நடப்பு நிதியாண்டில் எங்களின் வராக்கடன் அளவு குறைந்து வருகிறது' என, மார்தட்டிக் கொள்ளும் வங்கிகளும் உள்ளன. பாங்க் ஆப் மகாராஷ்டிரா, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், சிண்டிகேட் வங்கி மற்றும் டெவலப்மென்ட் கிரெடிட் பாங்க் ஆகிய வங்கிகளின், வராக்கடன் அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது.இந்த வங்கிகளின் மொத்த வராக்கடன், 1.7 சதவீதம் (ரூ.138 கோடி) வீழ்ச்சி அடைந்து, 8,163 கோடி ரூபாயாக உள்ளது.தனியார் வங்கிகளான, ஐ.சி.ஐ.சி.ஐ., மற்றும் ஹெச்.டி.எப்.சி., வங்கிகளின் வராக்கடன் அளவு, 6 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவை (எஸ்.பி.ஐ.,) பொறுத்த மட்டில், மொத்த வராக்கடனில், மூன்றில் ஒரு பங்கு, அதாவது, 49 ஆயிரம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
தனிநபர் வாங்கிய கடன் போல, தனியார் நிறுவனங்கள் வாங்கிய கடன், திருப்பிச் செலுத்தப்படாத நிலை நிலவுகிறது. அத்தகைய நிறுவனங்களின் கடன்களை மறு கட்டமைப்பு செய்வதற்காக, நடப்பு ஆண்டில், 101 வழக்குகள், நிறுவன கடன் மறு கட்டமைப்பு அமைப்பிற்கு வந்துள்ளன.வங்கிகளின் வராக்கடன் அளவு அதிகரித்து வருவதால் கவலை தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, கடன் வழங்கும்போது கவனமாக வழங்க வேண்டும் எனவும், வழங்கப்படும் கடன் முறையாக செலவிடப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க, வணிக வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், வராக்கடன் என, ஒதுக்கி வைத்து விடாமல், அந்தக் கடனையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|