பதிவு செய்த நாள்
20 நவ2012
02:08
புதுடில்லி: நடப்பு 2012-13ம் சர்க்கரை பருவத்தில் (அக்.,-செப்.,), சென்ற 15ம் தேதி வரையிலுமாக, நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 9.84 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, சென்ற பருவத்தின், இதே காலத்தில், 7.76 லட்சம் டன் என்ற அளவில் இருந்தது என, இந்திய சர்க்கரை உற்பத்தியாளர் கூட்டமைப்பு (இஸ்மா) தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில், சர்க்கரை உற்பத்தியில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இதன் பயன்பாட்டிலும், இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.சென்ற 15ம் தேதி வரையிலுமாக, மேற்கொள்ளப்பட்ட சர்க்கரை உற்பத்தியில், கர்நாடக மாநிலத்தின் பங்களிப்பு, 27 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இந்தியாவில், குறிப்பாக, மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில், அதிக அளவில் சர்க்கரை ஆலைகள் உள்ளன.இருப்பினும், இம்மாநிலங்களில், கரும்பு விலை நிர்ணயம் செய்வதில், ஏற்பட்ட பிரச்னையால், குறைந்த அளவிலேயே சர்க்கரை ஆலைகள் செயல்படத் துவங்கியுள்ளன. இதனால், இம்மாநிலங்களின் சர்க்கரை உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.நடப்பு சர்க்கரை பருவத்தில், சென்ற 15ம் தேதி வரையிலுமாக, உத்தபிரதேசத்தில் மூன்று, மகாராஷ்டிராவில், 93, கர்நாடகாவில், 49 என, நாடு தழுவிய அளவில், 178 ஆலைகள், சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. சென்ற பருவத்தின், இதே காலத்தில், 215 ஆலைகள் இதன் உற்பத்தியில் ஈடுபட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு பருவத்தில், தாமதமான மழைப் பொழிவால், மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில், கரும்பு சாகுபடி பரப்பளவு வெகுவாக குறைந்துள்ளது.இதன் விளைவாக, ஒட்டுமொத்த அளவில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, நடப்பு பருவத்தில், 2.40 கோடி டன்னாக குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, சென்ற பருவத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை (2.60 கோடி டன்) விட, 8 சதவீதம் குறைவாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|