பதிவு செய்த நாள்
26 நவ2012
05:10
மும்பை:
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, வலுச் சேர்க்கும் முக்கிய துறைகளுள்,
வேளாண் துறையும் ஒன்றாகும். நம்நாட்டில், 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட
மக்கள், விவசாயத்தை நம்பியே உள்ளனர். உணவு தானியங்கள் உற்பத்தியில்,
நம்நாடு தன்னிறைவு கண்டுள்ளது.இருப்பினும், எண்ணெய் வித்துக்கள், பருப்பு
வகைகள் போன்றவற்றின் உற்பத்தியில் பின் தங்கியுள்ளோம். விவசாயத்தை
மேம்படுத்தும் வகையில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், வங்கிகள்
வழங்கும் மொத்த கடனில், 18 சதவீதம், வேளாண் துறைக்கு வழங்கப்படவேண்டும் என,
இலக்கு நிர்ணயித்துள்ளன.ஆனால், பல்வேறு காரணங்களால், நடப்பு நிதியாண்டில்,
பல பொதுத் துறை வங்கிகளால், இந்த இலக்கை எட்ட முடியாது என,
தெரியவந்துள்ளது.இந்நிலையில், பொதுத் துறை வங்கிகள் கூட்டத்தில், மத்திய
நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், "முன்னுரிமை துறைகளுக்கான கடன்
இலக்கை எட்டும் வகையில், வங்கிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
குறிப்பாக, வேளாண் கடன் இலக்கு அளவான, 18 சதவீதம் எட்டப்பட வேண்டும்' என்று
தெரிவித்தார்.
இதற்கு எடுத்துக்காட்டாக, சென்ற செப்டம்பர் மாதம் வரையிலுமாக, பொதுத்
துறையை சேர்ந்த பேங்க் ஆப் பரோடா, வழங்கிய மொத்த கடனில், வேளாண் துறைக்கு,
15.43 சதவீத அளவிற்கு கடன் வழங்கியுள்ளது.
இதையடுத்து, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆகியவை
தலா 12 சதவீதமும், அலகாபாத் பேங்க், 11 சதவீதமும், யூனியன் பேங்க் ஆப்
இந்தியா, 9.86 சதவீதமும், வேளாண் கடன் வழங்கியுள்ளன.நடப்பு நிதியாண்டில்,
வேளாண் கடன் இலக்கு எட்டுவது கடினம். மேலும், வேளாண் கடன் வழங்குவதில்
புதிய வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டால் மட்டுமே, அடுத்த 2 அல்லது 3
ஆண்டுகளில் வேளாண் துறைக்கான கடன் இலக்கை எட்டுவது சாத்தியமாகும் என,
பொதுத் துறை வங்கியைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொதுத் துறை வங்கிகளில், பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் ஆந்திரா
பேங்க்,வேளாண் துறைக்கு முறையே, 17.87 சதவீதம் மற்றும் 17.02 சதவீத
அளவிற்கு கடன் வழங்கியுள்ளன. எனவே, நடப்பு நிதியாண்டில், இவ்விரு வங்கிகள்
மட்டுமே வேளாண் கடன் இலக்கை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|