பதிவு செய்த நாள்
26 நவ2012
05:12
புதுடில்லி: மத்திய
பெட்ரோலிய அமைச்சகம், நடப்பு நிதியாண்டிற்கு, 1,05,252 கோடி ரூபாய், ரொக்க
மானியம் வழங்கும்படி, நிதியமைச்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.எண்ணெயை
சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய்
ஆகியவற்றை, அடக்க விலைக்கும் குறைவாக விற்பனை செய்கின்றன. இதனால்,
இந்நிறுவனங்களுக்கு, நடப்பு 2012-13ம் நிதியாண்டில், 1.63 லட்சம் கோடி
ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.மேற்கண்ட மொத்த
தொகையில், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள,
ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா, கெயில் ஆகிய நிறுவனங்கள், 60 ஆயிரம் கோடி
ரூபாயை மானியமாக வழங்குகின்றன.இது போக, 1.05 லட்சம் கோடி ரூபாயை ரொக்க
மானியமாக வழங்கும்படி, பெட்ரோலிய அமைச்சகம், நிதி அமைச்சகத்தை கேட்டுக்
கொண்டுள்ளதாக, மத்திய நிதி துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா
தெரிவித்தார்.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு
மாத காலத்தில், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு, 85,526 கோடி
ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதில், 30 ஆயிரம் கோடி ரூபாய்
ரொக்க மானியம் வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளதாக, பெட்ரோலிய துறையின் இணை
அமைச்சர் பனபாக லட்சுமி தெரிவித்தார்.
மத்திய அரசு, கடந்த 2009-10ம் நிதியாண்டில், 26 ஆயிரம் கோடி ரூபாயை ரொக்க மானியமாக வழங்கியது. இது, 2010-11ம் நிதியாண்டில், 41 ஆயிரம் கோடி ரூபாயாகவும், 2011-12ம்
நிதியாண்டில், 83,500 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது என, பனபாக லட்சுமி
மேலும் தெரிவித்தார்.தற்போதைய நிலவரப்படி, எண்ணெயை சந்தைப்படுத்தும்
நிறுவனங்களுக்கு, ஒரு லிட்டர் டீசல் விற்பனையில், 10.19 ரூபாயும்,
மண்ணெண்ணெய் விற்பனையில், 32.87 ரூபாயும், 14.2 கிலோ எடை கொண்ட சமையல்
எரிவாயு உருளை விற்பனையில், 478.50 ரூபாயும் இழப்பு ஏற்படுகிறது.சர்வதேச
சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய்
மதிப்பு வீழ்ச்சி போன்றவற்றால், நடப்பாண்டில், மானியத்திற்கான தேவை மேலும்
அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளதாக, நமோ நாராயண் மீனா மேலும்
தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|