பதிவு செய்த நாள்
26 நவ2012
14:29
இந்தியாவில், விலை அதிகமான சொகுசு கார்கள் விற்பனையில், பி.எம்.டபிள்யூ., ஆடி மற்றும் மெர்சிடஸ் பென்ஸ் கார் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி காணப்படுகிறது. தற்போது முதலிடத்தில், பி.எம்.டபிள்யூ., நிறுவனம் உள்ளது. சில மாதங்களுக்கு முன், பென்ஸ் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, இரண்டாவது இடத்தை, ஆடி கார் நிறுவனம் கைப்பற்றியது.இந்த நிறுவனத்தின், "க்ராஸ்ஓவர்' என்ற மாடலில் விற்பனை செய்யப்படும், க்யூ3, க்யூ5 மற்றும் க்யூ7 ஆகிய கார்களுக்கு தான், இந்தியாவில் அதிக மவுசு காணப்படுகிறது. கார்கள் மாடலில், சிறிய ரக கார்கள், நடுத்தர கார்கள், பிரிமியம் கார்கள், எஸ்.யு.வி., கார்கள், எம்.பி.வி., கார்கள் என பல தினுசு உண்டு. இதில், பொதுவான காரை, எஸ்.யு.வி., காரில் இருக்கும் அம்சங்களுடன் உருவாக்குவதை தான், "க்ராஸ்ஓவர்' மாடல் கார் என்று அழைக்கப்படுகிறது. மஹாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத்தில், ஆடி கார் நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது. இங்கு, ஏ4, ஏ6 மற்றும் க்யூ5 க்ராஸ்ஓவர் கார்கள் அசெம்பள்
செய்யப்படுகின்றன.
கார் உற்பத்தியில் இரண்டு வகை காணப்படுகிறது. அனைத்து வகையான உதிரிபாகங்களையும் உள்நாட்டிலேயே தருவித்து, உற்பத்தி செய்வது ஒருவகை. இதுதவிர, இன்ஜின் உள்ளிட்ட உதிரி பாகங்களை மட்டும் வெளிநாடுகளில் இருந்து தருவித்து, இந்தியாவில், அசெம்பள் செய்வது மற்றொரு வகை. இதை, சி.கே.டி., வகை என்று அழைக்கின்றனர். இதுதவிர, முழு காரையும், வெளிநாட்டில் உற்பத்தி செய்து, இந்தியாவுக்கு இறக்குமதி செய்து விற்பனை செய்கின்றனர். இதை சி.பி.யு., வகை என்று அழைக்கின்றனர். சி.பி.யு., வகை கார்களுக்கு, 100 சதவீதத்துக்கு மேல், சுங்க வரி வசூலிக்கப்படுகிறது. இதன் காரணமாக, அவ்வகை கார்களின் விலை அதிகமாக இருக்கும். அதே நேரத்தில், சி.கே.டி., வகையில் தயாரிக்கப்படும் கார்களுக்கு, 30 சதவீத சுங்க வரி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆடி கார் நிறுவத்தின், க்யூ7 க்ராஸ்ஓவர் மாடல் கார், இதுநாள் வரை, சி.பி.யு., வகையில் தான், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது, அதன் உதிரிபாகங்கள் தருவிக்கப்பட்டு, அவுரங்கபாத் தொழிற்சாலையில் அசெம்பள் செய்யப்படுகிறது. எனவே, க்யூ7 காரின் விலையில், 10 லட்சம் ரூபாய் வரை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|