பதிவு செய்த நாள்
27 நவ2012
07:05
புதுடில்லி: சர்க்கரை மீதான கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து பரிசீலனை செய்யப்படுவதாக, மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ், ராஜ்யசபாவில் தெரிவித்தார்.பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் சி.ரங்கராஜன் தலைமையில், அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில், சர்க்கரை மீதான கட்டுப்பாட்டை நீக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இது, மாநில அரசுகளின் கருத்துக்கேற்ப அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தற்போதைய நிலையில், உள்நாட்டில், சர்க்கரை உற்பத்தி முதல் சந்தைப்படுத்துதல் வரை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. சர்க்கரை ஆலைகள், அவற்றின் உற்பத்தியில், பெரும்பகுதியை, மத்திய அரசு நிர்ணயிக்கும் விலையில், வழங்க வேண்டியுள்ளது. அரசு, கொள்முதல் செய்யும் சர்க்கரை, ரேஷன் கடைகள் வாயிலாக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
மீதமுள்ள சர்க்கரையை ஆலைகள், பொதுச் சந்தையில் விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. சர்க்கரை மீதான கட்டுப்பாடு நீக்கப்படும் நிலையில், மாநில அரசுகள், சர்க்கரை ஆலைகளிடமிருந்து, குறிப்பிட்ட தொகையில் சர்க்கரையை கொள்முதல் செய்து, குறைந்த விலையில், ரேஷன் கடைகள் வாயிலாக, விற்பனை செய்யும் வகையில், இக்குழு பரிந்துரை செய்துள்ளது.சர்க்கரை மீதான கட்டுப்பாடு நீக்கப்பட்டால், அது, சர்க்கரை ஆலைகளுக்கும், விவசாயிகளுக்கும் பயன்அளிப்பதாக இருக்கும். மேலும், சர்க்கரை துறையில் முதலீடு அதிகரிப்பதற்கும், இது, வழிவகுக்கும் என, கூறப்படுகிறது.இதற்கு முன்பாக, டுடிஜா மற்றும் தோரட் ஆகிய இரு குழுக்கள், சர்க்கரை மீதான கட்டுப்பாடு குறித்து, அறிக்கை சமர்ப்பித்தன. ஆனால், இவ்விரு குழுக்களின் பரிந்துரை அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|