பதிவு செய்த நாள்
27 நவ2012
07:07
கோவை: தமிழகத்தில் நிலவும் கடுமையான மின் வெட்டு காரணமாக, ஏராளமான, ஜவுளி மற்றும் நூற்பாலை நிறுவனங்கள், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடம் பெயரத் திட்டமிட்டுள்ளன.ஒரு சில நிறுவனங்கள், மின்சாரப் பற்றாக்குறை இல்லாத மாநிலங்களில், அவற்றின் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான பணிகளை துவங்கி விட்டன.சென்னை நீங்கலாக, தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு,12-14 மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது. சென்னையில், நாள்தோறும், இரண்டு மணி நேரம் மின்வெட்டு உள்ளது.கடுமையான மின்வெட்டு காரணமாக, பல்வேறு துறைகளை சேர்ந்த ஏராளமான தொழிற்
சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி குறைந்துள்ளது.பல நிறுவனங்கள், பணி நேரத்தை குறைத்துள்ளன. இதனால், தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். குறிப்பாக, ஒப்பந்த தொழிலாளர்களின் தினக்கூலியில் வெட்டு விழுந்துள்ளது. இதனால், அவர்களின்வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.குறிப்பாக, மின் தட்டுப்பாட்டால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் நூற்பாலைகள் முழுமையாக செயல்பட முடியாமல் முடங்கியுள்ளன.
இது, இந்நிறுவனங்களின் விரிவாக்க திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள நூற்பாலைகள், 2.30 கோடி கதிர்களுடன் இயங்குவது வழக்கம். இந்த ஆலைகளில், ஆண்டுக்கு 7-8 லட்சம் புதிய கதிர்கள் சேர்க்கப் படும். இதில், கோவையின் பங்களிப்பு, 40 சதவீதம் என்ற அளவில் இருக்கும்.தற்போது, நிலவும் மின்வெட்டு காரணமாக, இந்த ஆலைகள், வழக்கமான பணிகளை மேற்கொள்ள முடியாமலும், உற்பத்தி திறனை அதிகரித்துக் கொள்ள இயலாமலும் உள்ளன.கடந்த மூன்று ஆண்டுகளாகவே, மின்வெட்டு பிரச்னையால், நூற்பாலைகள் அவற்றின் கதிர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாமல் உள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார மந்தநிலையால், இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி, கடந்த மூன்று ஆண்டுகளாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.தற்போது, சர்வதேச ஜவுளி சந்தை சீரடைந்து வரும் நிலையில், அதை பயன்படுத்திக் கொள்ள இயலாத அளவிற்கு, தமிழகத்தில் கடும் மின்வெட்டு பிரச்னை உள்ளது என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து, சிறிய மற்றும் பெரிய நூற்பாலை நிறுவன அதிபர்கள், அண்மையில் ஒன்று கூடி, மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசித்தனர்.இக்கூட்டத்தில், மின்வெட்டு இல்லாத மாநிலங்களில் ஆலைகளை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில், மின் கட்டணம் சற்று அதிகமாக உள்ள போதிலும், மூலப்பொருளான பருத்தி அதிகம் கிடைப்பதால், அங்கு ஆலைகளை அமைப்பது, வர்த்தக ரீதியில் சிறப்பாக இருக்கும் என, கூட்டத்தில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இதையடுத்து, தென்னிந்திய ஜவுளி ஆலைகள் கூட்டமைப்பு (சைமா) சார்பில், சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், தமிழக நூற்பாலை நிறுவன பிரதிநிதிகளும், குஜராத், மகாராஷ்டிரா மாநில அரசுகளின் ஜவுளித் துறை உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.அப்போது, தங்கள் மாநிலங்களில் நூற்பாலைகளை அமைத்தால், பல்வேறு சலுகைகளை வழங்குவதாக அரசுஅதிகாரிகள் தெரிவித்தனர்.குறிப்பாக, மகாராஷ்டிராவில் முதலீடு செய்தால், மின் கட்டணத்தில் சலுகை வழங்குவதாக, அம்மாநில அரசு அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.இதையடுத்து, "சைமா' வை சேர்ந்த சில உறுப்பு ஆலைகள், வெளிமாநிலங்களில், ஆலைகள் அமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகளையும் துவங்கி விட்டன.குஜராத் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருப்பதால், அதன் முடிவுகளை பொறுத்து, தமிழக நூற்பாலைகள், அம்மாநிலத்தில், முதலீடு மேற்கொள்வது பற்றி தீர்மானிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|