பதிவு செய்த நாள்
03 டிச2012
00:20
மும்பை:அன்னிய நிதி நிறுவனங்கள், நடப்பு ஆண்டில் சென்ற நவம்பர் 30ம் தேதி வரை, இந்திய பங்குச் சந்தைகளில், 1,01,315 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. இத்துடன், மூலதனச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டையும் சேர்த்து, அன்னிய நிதி நிறுவனங்களின் மொத்த முதலீடு, 1.04 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
இந்திய பங்கு சந்தை:இது, கடந்த 14 ஆண்டுகளில், இந்திய பங்குச் சந்தைகளில், அன்னிய நிதி நிறுவனங்கள் மேற்கொண்ட இரண்டாவது மிகப் பெரிய முதலீடாகும்.கடந்த ஆறு வர்த்தக தினங்களில் மட்டும், அன்னிய நிதி நிறுவனங்கள், 100 கோடி டாலர் அளவிற்கு, இந்திய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்துள்ளன.
நடப்பு ஆண்டில், சென்ற பிப்ரவரியில் தான் இந்திய பங்குச் சந்தைகளில், அன்னிய நிதி நிறுவனங்கள் மிக அதிக அளவில் முதலீடு செய்துஇருந்தன. இம்மாதத்தில், 513 கோடி டாலர் முதலீடு மேற்கொள்ளப்பட்டது.இதையடுத்து, கடந்த செப்டம்பரில், மிக அதிகமாக, 384 கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.சென்ற நவம்பரில், இந்திய பங்குச் சந்தைகளில் 200 கோடி டாலர் அளவிற்கு அன்னிய நிதி நிறுவனங்கள் முதலீடு மேற்கொண்டுள்ளன.
அது போன்று, நடப்பு ஆண்டில், இதுவரை, மும்பை பங்குச் சந்தையின் "சென்செக்ஸ்' மற்றும் தேசிய பங்குச் சந்தையின் "நிப்டி' குறியீட்டு எண்கள், 25 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன.நடுத்தர மற்றும் சிறிய அளவில் சந்தை மதிப்பை கொண்டுள்ள நிறுவனங்கள் தான் இந்த வளர்ச்சிக்கு காரணம். இந்நிறுவனப் பங்குகளில் தான், அன்னிய நிதி நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு மேற்கொண்டுள்ளன.
பொருளாதார வளர்ச்சி:சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் பொருளாதார வளர்ச்சி, மந்தநிலையில் இருந்து மீள்வதற்கான அறிகுறிகள் தென்படுவதால், அன்னிய நிதி நிறுவனங்கள் பங்குச் சந்தைகளில் மேற்கொண்டு வரும் முதலீடு அதிகரித்து வருகிறது.இத்துடன், மத்திய அரசு அண்மையில் அறிவித்த நிதி சீர்திருத்த திட்டங்கள், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி போன்றவற்றாலும், அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குச்சந்தைகளில் அதிக அளவில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளன.
மதிப்பீட்டு காலத்தில், ஆசிய பங்குச் சந்தைகளில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீட்டை ஈர்த்ததில் இந்தியா (2,000 கோடி டாலர்) முதலிடத்தை பிடித்துஉள்ளது. இரண்டாவது இடத்தில் தென்கொரியா (1,180 கோடி டாலர்) உள்ளது. அடுத்த இடங்களில், ஜப்பான் (780 கோடி டாலர்),பிலிப்பைன்ஸ் (220 கோடி டாலர்), தைவான் (350 கோடி டாலர்), தாய்லாந்து(180 கோடி டாலர்) ஆகியவை உள்ளன.
கடன் பத்திரங்கள்:இந்நிலையில், நீண்ட கால அடிப்படையில் அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்களில், தலா 500 கோடி டாலர் முதலீடு செய்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.இது, ஏழு முதல் பத்து நாட்களில் அமலுக்கு வரும் என, மத்திய நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம், அன்னிய நிதி நிறுவனங்கள் கடன்பத்திரங்களில் முதலீடு மேற்கொள்வதற்கான வரம்பு, 6,500 கோடி டாலரில் இருந்து 7,500 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|