பதிவு செய்த நாள்
03 டிச2012
00:21
புதுடில்லி:இந்தியா, 30 ஆண்டுகளுக்கு பிறகு, அரிசி ஏற்றுமதியில் தாய்லாந்தை விஞ்சி முதலிடத்தை பிடித்துள்ளது.நடப்பாண்டில், இந்தியா, 97.50 லட்சம் டன் அரிசியை ஏற்றுமதி செய்துஉள்ளது. தாய்லாந்து, 65 லட்சம் டன் அரிசியை மட்டுமே ஏற்றுமதி செய்து, மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
சென்ற 2011ம் ஆண்டு, தாய்லாந்து, 1.07 கோடி டன் அரிசியை ஏற்றுமதி செய்திருந்தது. இந்தியா, கடந்த ஆண்டு செப்டம்பரில் தான் அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி அளித்தது. இதனால், சென்ற ஆண்டு, இந்தியாவின் அரிசி ஏற்றுமதி, 48 லட்சம் டன் என்று அளவிற்கே இருந்தது. இந்தியாவை விட, தாய்லாந்து அரிசியின் விலை அதிகமாக இருப்பதால், சர்வதேச சந்தையில் அதற்கு வரவேற்பு குறைந்துள்ளது.
தாய்லாந்து அரிசி விலை, ஒரு டன், 530-540 டாலராக உள்ளது. அதே சமயம் இந்திய அரிசி விலை, ஒரு டன், 375-385 டாலர் என்ற அளவில் உள்ளது.தாய்லாந்து ஆளும் கட்சி, தேர்தல் வாக்குறுதியை காப்பாற்றும் நோக்கில், நெல் கொள்முதல் விலையை, டன்னுக்கு, 15 ஆயிரம் பாத் ஆக உயர்த்தியுள்ளது.
இதனால், தாய்லாந்தில் இருந்து ஏற்றுமதியாகும் அரிசியின் விலை, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் போட்டியிட முடியாத அளவிற்கு அதிகமாக உள்ளது.எனினும், தாய்லாந்தின் நெல் கையிருப்பு அதிகரித்து வருவதால், இந்நாடு, வரும் 2013ம் ஆண்டு, 85 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி மேற்கொண்டு, இந்தியாவை விஞ்சும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயம், நடப்பு 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவின் அரிசி ஏற்றுமதி, 72.50 லட்சம் டன் என்ற அளவிற்கே இருக்கும் என,எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பாண்டு, அரிசி ஏற்றுமதியில் பின் தங்கிய போதிலும், சர்க்கரை ஏற்றுமதியில், தாய்லாந்து, இந்தியாவை விஞ்சி, தொடர்ந்து இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என, தெரிகிறது.நடப்பாண்டில், தாய்லாந்து, 77 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி மேற்கொள்ளும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில், நடப்பாண்டு ஜூலையில் சர்க்கரை ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால், நடப்பாண்டில், இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி, 36.70 லட்சம் டன் என்ற அளவிற்கே இருக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|