பதிவு செய்த நாள்
04 டிச2012
00:19
இந்தியாவில், அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து (பி.பி.பி.,), செயல்படுத்தி வரும் நெடுஞ்சாலை திட்டங்களில், தமிழகம், 20 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.அது போன்று, இதே கூட்டுடன் தற்போது நடைபெற்று வரும் நெடுஞ்சாலை கட்டுமான பணிகளில், 7 சதவீத பங்களிப்புடன், தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளதாக, அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது.
மின்சாரம்:இந்தியாவில், விமான நிலையங்கள், நெடுஞ்சாலை, மின்சாரம், துறைமுகம், நகர்ப்புற மேம்பாட்டு பணிகள் போன்ற அதிக முதலீடுகளை கொண்டுள்ள அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை, மத்திய, மாநில அரசுகள், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தி வருகின்றன.நடப்பாண்டு ஆகஸ்ட் வரையிலுமாக, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்கேற்புடன், நாடு தழுவிய அளவில், 21,600 ரூபாய் மதிப்பிலான, 115 சாலை அமைக்கும் திட்டங்கள் முடிவுற்றுள்ளன.
இதில், மகாராஷ்டிரா மாநிலத்தில், 4,800 கோடி ரூபாய் மதிப்பிலான, 21 திட்டங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதையடுத்து, அரசு - தனியார் பங்கேற்புடன் நிறைவேற்றப்பட்டு, செயல்பாட்டிற்கு வந்துள்ள, நெடுஞ்சாலை பணிகளில், மகாராஷ்டிரா, 22 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது.இதையடுத்து, 20 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ள, தமிழகத்தில், 4,400 கோடி ரூபாய் மதிப்பிலான, 11 நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
ராஜஸ்தான்: மூன்றாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில், 3,400 கோடி ரூபாய் மதிப்பிலான, 28 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.மத்திய பிரதேசத்தில், 1,800 கோடி ரூபாய் மதிப்பிலான, 14 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இம்மாநிலம் நான்காவது இடத்தில் உள்ளது. ஐந்தாவது இடத்தில் உள்ள ஆந்திராவில், 1,700 கோடி ரூபாய் மதிப்பிலான, ஏழு நெடுஞ்சாலை திட்டங்கள் முடிவடைந்து, செயல்பாட்டில் உள்ளன.
உத்தரபிரதேசம்:"பி.பி.பி.,' திட்டத்தின் கீழ், இந்தியாவில், தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் தான் அதிக அளவில் நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன.தேசிய அளவிலான இவ்வகை பணிகளில், உத்தரபிரதேசம் 33 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளது.
இம்மாநிலத்தில், 55 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 15 சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதையடுத்து, இரண்டாவது இடத்தில் உள்ள குஜராத்தில், 13,600 கோடி ரூபாய் மதிப்பில், 22 நெடுஞ்சாலை திட்டங்களுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.மகாராஷ்டிரா:மூன்றாவது இடத்தில் உள்ள தமிழகத்தில், 12,700 கோடி ரூபாய் மதிப்பிலான, 21 சாலை அமைக்கும் திட்டங்களில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலுமாக, இந்தியாவில், அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் கூட்டுடன் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 881 திட்டங்கள் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.நகர்ப்புற மேம்பாடு:இதில், தற்போது, 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 230 திட்டங்கள் முடிவுற்று செயல்பட்டு வருகின்றன. 3.80 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 432 திட்டங்களில், கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், 78 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 172 திட்டங்களை செயல்படுத்த ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.உள்நாட்டில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கூட்டாக செயல்பட்டு வரும் துறைகளில், நெடுஞ்சாலை துறை, 52 சதவீத பங்களிப்புடன், முதலிடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து, நகர்ப்புற மேம்பாடு, மின்சாரம் ஆகிய துறைகள், தலா 20 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|