பதிவு செய்த நாள்
10 டிச2012
00:25
புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஆறு மாத காலத்தில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 398 டன்னாக சரிவடைந்து உள்ளது.இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 589 டன்னாக அதிகரித்து காணப்பட்டது. ஆக, நாட்டின் தங்கம் இறக்குமதி, 32.42 சதவீதம் சரிவடைந்துள்ளது என, மத்திய நிதி துறையின் இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பார்லிமென்டில் தெரிவித்தார் .
இதே காலத்தில், மதிப்பின் அடிப்படையில், இதன் இறக்குமதி, 1.40 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 1.15 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கும் வகையில், தங்கம் இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, தங்கம் மீதான இறக்குமதி வரி, 2 சதவீதத்திலிருந்து, 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இறக்குமதி வரியை உயர்த்தியது மட்டும், தங்கம் இறக்குமதி குறைந்ததற்கு காரணம் என்று கூற முடியாது என, அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.சென்ற செப்டம்பர் வரையிலான ஓராண்டு காலத்தில், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, 18 சதவீதத்திற்கும் மேல் சரிவடைந்துள்ளது. இதனால், தங்க இறக்குமதி செலவினம் உயர்ந்து உள்ளது. இருப்பினும், வரும் மாதங்களில், அதிகளவில், பண்டிகை மற்றும் திருமண காலம் வரவிருப்பதையொட்டி, தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தங்கம் இறக்குமதி உயரும் என, தெரிகிறது.
சென்ற நிதியாண்டில், அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 4.2 சதவீதம் என்ற அளவில் அதிகரித்தது.நடப்பு நிதியாண்டில், இதை, 3.6 சதவீதம் என்ற அளவில் கட்டுக்குள் வைக்க இயலும் என, நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. எனினும், நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 3.9 சதவீதமாக உயர்ந்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|