பதிவு செய்த நாள்
11 டிச2012
11:41
புதுடில்லி:வங்கிகள் வழங்கிய கடனை, மீட்கும் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில், கொண்டு வரப்பட்ட கடன் மீட்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., இடதுசாரி கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இருப்பினும், இம்மசோதா லோக்சபாவில், குரல் ஒட்டெடுப்பு மூலம் நிறைவேறியது.வங்கிகள் வழங்கிய கடன், நீண்ட நாட்களாக வசூலாகாமல் நிலுவையில் உள்ளது. கடன்களை மீட்கும் வகையில், கடன் பெற்ற நிறுவனங்களின் பங்குகளை, சொத்து மறுசீரமைப்பு கம்பெனிக்கு மாற்றும் வகையில், கடன் மீட்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.இதற்கான கடன் மீட்பு மசோதா, கடந்தாண்டு டிசம்பர் மாதம் லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவை பரிசீலிப்பதற்காக, பார்லிமென்ட் நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என, எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதற்கு சபாநாயகர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த மசோதா மீது நேற்று லோக்சபாவில் விவாதம் நடந்தது.""வங்கிகள் கொடுத்த கடனை வசூலிக்க முடியாமல் திணறும்போது, பார்லி குழுவுக்கு அனுப்பினால், இன்னும் தாமதமாகும். வங்கிகள் நலன் கருதி, இந்தாண்டு இந்த மசோதா நிறைவேறுவது அவசியமாகிறது,'' என, நிதி அமைச்சர், சிதம்பரம் எடுத்துரைத்தார். இதற்கு பாரதிய ஜனதா, இடதுசாரி போன்ற எதிர்க்கட்சிகள், தங்கள் நிலையில் இருந்து மாறாமல், நிலைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என, கோரின. இதை மத்திய அரசு ஏற்க மறுத்தது."வங்கிகளை மீட்க வேண்டும் என்றால், "கிங்பிஷர்' போன்ற பெரிய பெரிய கம்பெனிகள் எல்லாம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் இருக்கின்றன. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.இதற்கு பதில் அளித்த, சிதம்பரம், ""யாருக்கும் சலுகை காட்டப்பட மாட்டாது. சட்டம் தன் கடமையை செய்யும். கடன் பெற்றவர்கள் இணைந்துள்ள சொத்துக்களை மீட்க வங்கிகள் நடவடிக்கை எடுக்கும். அவர்களுக்கு புதிதாக கடன் வழங்கப்பட மாட்டாது,'' என்று கூறினார்.இதில், திருப்தியடையாத எதிர்க்கட்சிகள், வெளிநடப்பு செய்தன. இதையடுத்து, சபையில் உள்ள உறுப்பினர்களை கொண்டு, குரல் ஓட்டெடுப்புக்கு மசோதா விடப்பட்டது. இதில் ஏகமானதாக மசோதா நிறைவேறியது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|