பதிவு செய்த நாள்
14 டிச2012
00:30
சென்னை:வங்கிகளில், யாருடைய பரிந்துரையும் இல்லாமல், ஒருவர் சேமிப்பு கணக்கை துவக்கலாம் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது, ஒரு வங்கியில் கணக்கை துவக்க, அவ்வங்கி வாடிக்கையாளர் ஒருவரின் பரிந்துரை தேவைப்படுகிறது.இதனால், குறிப்பிட்ட வங்கி கிளையில் ஒருவர் சேமிப்பு கணக்கை துவக்க விரும்பினாலும், பரிந்துரைக்க யாரும் முன்வராதபட்சத்தில் அவரால் கணக்கை துவக்க முடியாத நிலை உள்ளது. மத்திய அரசு, பயனாளிகளுக்கு நேரடியாக ரொக்க மானியம் வழங்கும் திட்டத்தை, வரும் ஜனவரியில், 51 மாவட்டங்களில் அறிமுகப்படுத்த உள்ளது. 'ஆதார்' அட்டை அடிப்படையிலான இத்திட்டத்தில், பயனாளியின் வங்கி கணக்கில், மானியம் வரவு வைக்கப்படும்.அதுபோன்று, சமையல் எரிவாயு உருளைக்காக விண்ணப்பம் செய்வோரிடமும், வங்கி கணக்கு எண் விவரம் கேட்கப்படுகிறது.இத்தகைய தேவைகளுக்காக, வங்கி கணக்கு துவக்குவதை ரிசர்வ் வங்கி சுலபமாக்கியுள்ளது.
மேலும், தற்போது, வங்கி கணக்கை துவக்க, ஓட்டுனர் உரிமம், வருமான வரி கணக்கு எண் ('பான்' அட்டை) உள்ளிட்ட ஏதாவது ஓர் அடையாள அட்டையும், வசிப்பிட சான்றுக்கு (குடும்ப அட்டை) மற்றொரு ஆவணமும் கேட்கப்படுகிறது.இந்த நடைமுறையையும் ரிசர்வ் வங்கி தற்போது சுலபமாக்கி உள்ளது. இனி, ஓட்டுனர் உரிம அடையாள அட்டையில் உள்ள முகவரியும், வசிப்பிட முகவரியும் ஒன்றாக இருந்தால், அதுவே வங்கி கணக்கு துவங்க போதுமானது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கி சேமிப்பு கணக்கை துவக்குவதற்கான விண்ணப்பத்தில், அடையாள அட்டையில் இல்லாத முகவரியை, வசிப்பிடமாக குறிப்பிட்டால் மட்டுமே, அதற்கான மற்றொரு சான்றை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால், இனி பொதுமக்கள் சுலபமாக வங்கிகளில் சேமிப்பு கணக்கை துவங்க முடியும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|