பதிவு செய்த நாள்
14 டிச2012
00:33
தமிழகத்தில் பருவமழை பொய்த்து விட்ட நிலையில், கர்நாடகம், காவிரியில் தண்ணீர் திறக்க மறுத்ததன் காரணமாக, நெல்லுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அரிசி உற்பத்தியை தொடர்வதற்காக, அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் கொள்முதல் செய்ய வடமாநிலங்களுக்கு படையெடுக்க துவங்கி உள்ளனர்.தமிழகத்தில், 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெல், அரிசி விலை உயர்ந்துள்ளது. டெல்டா மாவட்டங்களின் விவசாய பணிக்காக, ஜூன், 12ம் தேதி, மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம்.
கடும் பாதிப்பு:நடப்பாண்டில், மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பு இல்லாததால், செப்., 17ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.வடகிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு இல்லாததால், காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், நெல் விளைச்சலில் நடப்பாண்டு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.டெல்டா மாவட்டங்களில் இருந்து வழக்கமாக, டிசம்பர் இரண்டாவது வாரத்தில் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும் நெல், நடப்பாண்டில், ஜன., மாதம் இரண்டாவது வாரத்தில் தான் விற்பனைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நெல் விளைச்சல்:காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர், கடைமடை வரை செல்லாத நிலையில், மின்தடை காரணமாக கிணற்று நீர் பாசனமும் எதிர்பார்த்த அளவு இல்லை. தமிழகத்தில் நெல் விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.நெல் அதிக அளவில் விளையும், திருவாரூர் மாவட்டத்தில், 70 சதவீதமும், தஞ்சாவூர், கும்பகோணம், செஞ்சி, செங்குன்றம், செங்கல்பட்டு, சேத்பட்டு,
செய்யாறு, வந்தவாசி ஆகிய இடங்களில், 50 சதவீதம் வரை, நெல் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ராமநாதபுரம், ஆவுடையார் கோவில் பகுதிகளில் இருந்து, குறைந்த அளவில் நெல் விற்பனைக்கு வரும் நிலையில், ஆந்திர மாநில வியாபாரிகள், அதிக விலை கொடுத்து, நெல்லை வாங்கிச் செல்கின்றனர். வழக்கமாக டெல்டா மாவட்டங்களில் இருந்து, டிசம்பர் மாதத்தில், 30
லட்சம் முதல், 50 லட்சம் டன் வரை, நெல் விற்பனைக்கு வருவது வழக்கம்.ஆனால், நடப்பாண்டில் நெல் அறுவடை தாமதம் ஆவதோடு, ஜனவரி மாதத்தில், 10 முதல், 15 லட்சம் டன் நெல் விற்பனைக்கு வந்தாலே ஆச்சரியம் என்கின்றனர் வியாபாரிகள்.
கொள்முதல்:தமிழகத்தில் நெல்லுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அரிசி ஆலை உரிமையாளர்கள், பீகார், உத்தரபிரதேசம், சட்டீஸ்கர், மகாராஷ்டிரா மாநிலங்களில் நெல் கொள்முதல் செய்வதற்கு படையெடுத்துள்ளனர். அம்மாநிலங்களில் நெல் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், நெல் கொள்முதல் செய்ய, தமிழக வியாபாரிகளுடன், ஆந்திர வியாபாரிகளும் போட்டி போடத் துவங்கி உள்ளனர். நெல் கிலோ, 10 ரூபாய்க்கு விற்றது, தற்போது, 13 ரூபாயாக அதிகரித்து உள்ளது.
அந்த விலை கொடுத்து நெல்லை வாங்கும் பட்சத்தில், தமிழகத்துக்கு அதை கொண்டு வர, கிலோவுக்கு, ஆறு ரூபாய் வரை, வாடகையாக கொடுக்க வேண்டும் என்பதால், தமிழகத்துக்கு நெல் வரும் நிலையில், அதன் விலை, 19 ரூபாயாக அதிகரித்து விடுகிறது.
அரிசி விலை:நெல்லுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அனைத்து ரக நெல்லின் விலையும், கிலோவுக்கு, ஒரு ரூபாய் முதல், மூன்று ரூபாய் வரை, அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால், அரிசி விலையும் மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இன்றைய அளவில் நெல் விலை நிலவரம்: (கிலோ)வெள்ளை பொன்னி பழசு, 24 ரூபாய், புதுசு 21, கிராந்தி பழசு, 19, புதுசு, 18, கர்நாடகா பொன்னி (சோனா), 21, குண்டு ஏ.டி.டி., 18, அதிசய பொன்னி, 18, டீலக்ஸ் பொன்னி, 20, ஏ.டி.டி., 118 ரூபாய்க்கு விற்கிறது.
தமிழகத்தில் செயல்படும், 7,632 அரிசி ஆலைகளில், 90 சதவீத ஆலைகள் மின் தடை காரணமாக, தங்களின் உற்பத்தியை நிறுத்தி விட்டன. உத்தரபிரதேசம் :குறைந்த அளவில் இயங்கி வந்த அரிசி ஆலைகளுக்கு, தற்போது நெல் தட்டுபாடு புதிய தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.நவீன ஆலைகள் மட்டும், தற்போது நெல் உற்பத்தியை தொடர பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து, நெல்லை வரவழைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அங்கும் நெல் விலை அதிகரித்து உள்ளதால், தமிழகத்தில் அரிசி விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது என, அரிசி ஆலை உரிமையாளர் ஒருவர் கூறினார்.- நமது சிறப்பு நிருபர் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|