பதிவு செய்த நாள்
17 டிச2012
00:22
மும்பை:உள்நாட்டில், செயல்படும் வங்கிகளின் அலுவல் நாட்களை, வாரத்திற்கு ஐந்து தினங்களாக குறைக்க வேண்டும் என, தேசிய வங்கி பணியாளர் சங்கம், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.பல வங்கிகள், அவற்றின் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்கில், அன்றாட பணி நேரத்தை அதிகரித்துள்ளன. இதனால், பணியாளர்களுக்கு வேலை சுமை அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான்:அவர்களுக்கு, புத்துணர்வு அளிக்கும் வகையில், வங்கிப் பணியை, வாரத்திற்கு ஐந்து தினங்களாக குறைக்க, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.ஆனால், இதுகுறித்து மத்திய அரசு, எவ்வித முடிவும் எடுக்காமல் உள்ளது. சர்வதேச அளவில், பல நாடுகளில் உள்ள வங்கிகள், வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே செயல்படுகின்றன.
குறிப்பாக, அண்டை நாடான பாகிஸ்தானில், வங்கிப் பணி, வாரத்திற்கு ஐந்து நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டில், வங்கி பணியாளர்களின் திறன் அதிகரித்துள்ளது.இணையதளம், ஏ.டி.எம்., மற்றும் அலைபேசி போன்றவற்றின் வாயிலாக, வங்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, வங்கி, அலுவல் தினத்தை, ஐந்து நாட்களாக குறைப்பதால், வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
தகவல் தொழில்நுட்பம்:மேலும், தற்போதைய நிலையில், வாடிக்கையாளர்கள், வங்கி கிளைக்கு வராமலேயே வங்கி பணிகளை மேற்கொள்ளும் வகையில், பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.வங்கிப் பணியை, ஐந்து நாட்களாக குறைப்பதன் வாயிலாக, உலக வெப்பமயமாதலை ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடியும் என்பதுடன், போக்குவரத்து நெரிசலையும் குறைக்க முடியும் என, இச்சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில், மத்திய அரசு அலுவலகங்கள், ரிசர்வ் வங்கியின் அன்னியச் செலாவணி பிரிவு, பார்லிமென்ட், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் வாரத்திற்கு, ஐந்து நாட்கள் மட்டுமே செயல்படுகின்றன.எனவே, உள்நாட்டில் செயல்படும், வங்கிகளின் அலுவல் தினங்களை வாரத்திற்கு, ஐந்து நாட்களாக குறைக்க வேண்டும் என, இச்சங்கம், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|