பதிவு செய்த நாள்
17 டிச2012
00:24
பரமக்குடி:பட்டு நூலிழை விலை, சில மாதங்களாக, மிகவும் உயர்ந்துள்ளதால், பரமக்குடி நெசவாளர்கள் திணறி வருகின்றனர்.கைத்தறி நெசவாளர்கள் 'பம்பர்', 'பருத்தி பட்டு' போன்ற ரகங்களை நெய்து வருகின்றனர். இதற்கு பயன்படுத்தும், '2 பிளே' ரக பட்டு நூலிழை, 2012 பிப்ரவரி துவக்கத்தில், கிலோ 2,900 ரூபாய்க்கு விற்ற நிலையில், டிசம்பரில் 3,600 ரூபாய்க்கும், '4 பிளே' ரக பட்டு நூலிழை, 2,400ல் இருந்து 3,100 ரூபாய்க்கும் உயர்ந்துள்ளது.
கோரா சாதாபாவு 2,100ல் இருந்து 3,000 ரூபாயாகவும், கோரா கெண்டம்பாவு, 2,200ல் இருந்து 3,000 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. மின்தடை ஒருபுறம் மிரட்டி வரும் நிலையில், சந்தையில் பட்டு சேலைகள் பழைய விலைக்கே விற்கப்படுவதால், நெசவாளர்கள் திணறி வருகின்றனர். விற்பனையும் மிகவும் சரிந்துள்ளது.மேலும், கைத்தறி ரக ஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் உள்ளதால், விசைத்தறியில் குறைந்த விலைக்கு பட்டு உற்பத்தி செய்து, விற்கும் அவலம் தொடர்கிறது.
பரமக்குடி பட்டு நெசவு உற்பத்தியாளர்கள் கூறியதாவது: 2011 ஜனவரியில், 4,000 ரூபாயை தொட்ட, பட்டு நூலிழை விலை, டிசம்பரில் 2,000 ரூபாயாக குறைந்தது.இந்தாண்டு ஜனவரியில் இருந்து, மாதம் 100 ரூபாய் என்ற அளவில், விலை அதிகரித்து வருகிறது. இதனால் மொத்த விற்பனையாளர்கள் பட்டு நூலிழைகளை பதுக்கி வருகின்றனர்.
மேலும், நெசவாளர்களுக்கு, குறிப்பிட்ட நேரத்தில் கச்சாப் பொருட்கள் கிடைக்காமல், வேலையின்றி அலையும் சூழல் உண்டாகிறது.ஆகவே மத்திய, மாநில அரசுகள், 'ஆன் - லைன்' வர்த்தகத்தில் உள்ள பட்டு நூலிழை விற்பனையை மீட்பதுடன், நெசவாளர்களின் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|