பதிவு செய்த நாள்
17 டிச2012
00:25
புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், நாட்டின் ஜவுளி ஏற்றுமதி, டாலர் மதிப்பின் அடிப்படையில், 1,196 கோடி டாலராக சரிவடைந்து உள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (1,308 கோடி டாலர்) விட, 8.6 சதவீதம் குறைவாகும் என, மத்திய வர்த்தக நுண்ஆய்வு மற்றும் புள்ளியியல் தலைமை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா:நம்நாட்டிற்கு, முக்கிய சந்தைகளாக திகழும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் (65 சதவீத பங்களிப்பு), ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலையால், இந்நாடுகளுக்கான ஒட்டு மொத்த ஜவுளி ஏற்றுமதி, மிகவும் குறைந்து போயுள்ளது.நடப்பு முழு நிதியாண்டில், 4,059 கோடி டாலர் மதிப்பிற்கு ஜவுளி ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், இவற்றின் ஏற்றுமதி குறைந்துள்ளதால் மேற்கண்ட ஏற்றுமதி இலக்கு எட்டப்படாது என, தெரியவந்துள்ளது.இருப்பினும், கடந்த ஒரு சில மாதங்களாக, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு சரிவுஅடைந்துள்ளது. இதனால், ரூபாய் மதிப்பின் அடிப்படையில், ஜவுளி ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், 10.4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 65,377 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பருத்தி ஆடைகள்:கணக்கீட்டு காலத்தில், பருத்தி ஆடைகள் மற்றும் இதர உதிரி பாகங்கள் ஏற்றுமதி, 17.7 சதவீதம் குறைந்து, 398 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. இதே போன்று, பருத்தி நூலிழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள் மற்றும் ஆடைகள் ஏற்றுமதி, 2.6 சதவீதம் குறைந்து, 342 கோடி டாலராக குறைந்துஉள்ளது. கைகளால் உற்பத்தி செய்யப்படும், நூலிழை மற்றும் துணிகள் ஏற்றுமதி, 13.25 சதவீதம் குறைந்து, 235 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
நாட்டின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில், மேற்கண்ட மூன்று பிரிவுகளின் பங்களிப்பு, 82 சதவீதம் ஆகும்.கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் ஜவுளி ஏற்றுமதி இலக்கு, 3,831 கோடி டாலராக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவ்வாண்டில், இவற்றின் ஏற்றுமதி, 3,400 கோடி டாலர் அளவிற்கே இருந்தது. இருப்பினும், இது, அதற்கு முந்தைய நிதியாண்டின் ஏற்றுமதியை விட, 26 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச பொருளாதார சுணக்க நிலை மற்றும் வர்த்தக பற்றாக்குறை உயர்ந்து வருவது போன்றவற்றை கருத்தில் கொண்டு, மத்திய வர்த்தக அமைச்கம், ஏற்றுமதியை அதிகரிக்க, பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களை அறிவித்துள்ளது. ஏற்றுமதி இலக்கு:உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், பல்வேறு பொருட்களுக்கான தேவை சரிவடைந்துள்ளது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி இலக்கு எட்ட வாய்ப்பில்லை என, இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு (எப்.ஐ.இ.ஓ.,) தெரிவித்துள்ளது.நடப்பு 2012-13ம் நிதியாண்டில், 36 ஆயிரம் கோடி டாலர் அளவிற்கு எற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் பொருளாதார மந்தநிலையால், நடப்பு நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, 4 ஆயிரம் கோடி டாலர் குறைந்து, 32 ஆயிரம் கோடி டாலர் அளவிற்கே இருக்க வாய்ப்புள்ளது என, எப்.ஐ.இ.ஓ., தெரிவித்துள்ளது.கடந்த நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, சாதனை அளவாக, 30,700 கோடி டாலர் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், நாட்டின் ஏற்றுமதி, 5.95 சதவீதம் குறைந்து, 18,920 கோடி டாலராக குறைந்துள்ளது.குறிப்பாக, ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாத காலத்தில், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கான ஏற்றுமதி, கடந்த ஆண்டின் இதே காலத்தை காட்டிலும், 9.6 சதவீதம் சரிவடைந்துள்ளது.
பொருளாதார மந்த நிலை :இதே போன்று, ஆசியான், வட கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ஏற்றுமதியும், குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்து போயுள்ளது. அதேசமயம், வட அமெரிக்க நாடுகளுக்கான, இந்தியாவின் ஏற்றுமதி, 12.5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.பொருளாதார மந்த நிலை காரணமாக, பெரும்பாலான நாடுகளில், ஏற்றுமதிக்கான தேவை சரிவடைந்துள்ளது. எனவே, நடப்பு நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, 30 ஆயிரம்- 32 ஆயிரம் கோடி டாலர் அளவிற்கே இருக்கும் என, எப்.ஐ.இ.ஓ., அமைப்பின் தலைவர் ரபீக் அகமது கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|