பதிவு செய்த நாள்
20 டிச2012
00:23

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் புதன்கிழமையன்று நன்கு இருந்தது. சில்லரை முதலீட்டாளர்கள், அதிகளவில், பங்குகளை வாங்கியதையடுத்து, "சென்செக்ஸ்' குறியீட்டு எண், 0.57 சதவீத ஏற்றத்துடன் முடிவடைந்தது.தர மதிப்பீட்டு நிறுவனமான, ஸ்டாண்டர்ட் அண்டு பூர்ஸ், கிரீஸ் நாட்டின் கடன் தகுதி மதிப்பீட்டை உயர்த்தியது.
இதையடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்றைய பங்கு வியாபாரத்தில், மோட்டார் வாகனம், தகவல் தொழில்நுட்பம், ஆரோக்யபராமரிப்பு, உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
இருப்பினும், நுகர்பொருட்கள், பொறியியல், நுகர்வோர் சாதனங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 111.25 புள்ளிகள் அதிகரித்து, 19,476 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,516.02 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,419.76 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டாட்டா மோட்டார்ஸ், ஓ.என்.ஜி.சி., சன்பார்மா உள்ளிட்ட, 24 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், எல் அண்டு டி, ஐ.டி.சி., உள்ளிட்ட, 6 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 32.80 புள்ளிகள் உயர்ந்து, 5,929.60 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,939.40 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,910.80 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|