பதிவு செய்த நாள்
22 டிச2012
00:38
புதுடில்லி:வரும் நிதியாண்டில், ஈரானில் இருந்து, 10-15 சதவீத அளவிற்கு, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பொருளாதார தடை:அணு ஆயுத விவகாரம் தொடர்பாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளன.இதையடுத்து, ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் குறைத்துக் கொண்டன.இதனால், ஈரானுக்கு, மாதந்தோறும், 500 கோடி டாலர் அளவிற்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது.அதேசமயம், ஈரான் மீதான தடை காரணமாக, டாலர் அடிப்படையில் குறுகிய கால கடன் வழங்க வங்கிகள் மறுக்கின்றன.
இறக்குமதி செலவினம்:இதனால், உள்நாட்டில், அதிக வட்டியில் கடன் பெறும் நிலை, இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் உயர்ந்துள்ளது. இதை யடுத்து, ஈரான் கச்சா எண்ணெய் விலையை குறைக்காவிட்டால், வரும் நிதியாண்டில், அந்நாட்டிலிருந்து மேற் கொள்ளப்படும், கச்சா எண்ணெய் இறக்குமதி குறைக்கப்படும் என, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உலகளவில், கச்சா எண்ணெய் இறக்குமதியில், இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது. கச்சா எண்ணெயை பொறுத்தவரை, இந்தியா, 80 சதவீதம் இறக்குமதியை நம்பி உள்ளது.
அமெரிக்கா:இதன்படி, நாள்தோறும், 35 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா எதிர்நோக்கி உள்ளது.இந்தியா அதிக அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில், சவுதி அரேபியாவை அடுத்து, இரண்டாவது இடத்தில் ஈரான் உள்ளது.அமெரிக்காவின் எச்சரிக்கையை தொடர்ந்து, சீனா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகள், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்துக் கொண்டன. நடப்பு நிதியாண்டில் ஈரான் கச்சா எண்ணெயை, இறக்குமதி செய்வதை இந்தியா 15 சதவீதம் குறைத்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|