பதிவு செய்த நாள்
22 டிச2012
00:43
நடப்பு 2012-13ம் நிதியாண்டில், 92 கோடி கிலோ பருத்தி நூலிழையை ஏற்றுமதி செய்ய, பருத்தி ஆலோசனை கழகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த 2011-12ம் நிதியாண்டில், இதன் ஏற்றுமதி, 82.77 கோடி கிலோவாக இருந்தது என, வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவை:உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பருத்தி நூலிழைக்கான தேவை அதிகரித்துள்ளதால், கடந்த ஒரு சில மாதங்களாக, இதன் விலை, படிப்படியாக அதிகரித்து உள்ளது. குறிப்பாக, கடந்த இரண்டு வாரங்களில், இதன் விலை, 14 சதவீதம் உயர்ந்துஉள்ளது.இரண்டு வாரங்களுக்கு முன்பாக, லூதியானா நடப்பு சந்தையில், ஒரு கிலோ, "30 கோம்ப்டு', பருத்தி நூலிழையின் விலை, 175 ரூபாய் என்ற அளவில் இருந்தது. இது, தற்போது, 200 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, மும்பை நடப்பு சந்தையில், 170 ரூபாயிலிருந்து, 195 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சீனா:கடந்த அக்டோபர் மாதத்தில், பருத்தி நூலிழை ஏற்றுமதிக்கான, முன்பதிவு, 47 சதவீதம் அதிகரித்து, 9.45 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது. இது, செப்டம்பர் மாதத்தில், 6.43 கோடி கிலோவாக இருந்தது.உள்நாட்டில் மட்டுமின்றி, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், பருத்தி நூலிழைக்கான தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே, இதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக மும்பையைச் சேர்ந்த வர்த்தகர், பாரத் மல்கான் தெரிவித்தார்.அடுத்த ஒரு சில மாதங்களில், கோடை காலம் வருவதை முன்னிட்டு, பருத்தி ஆடைகள் தயாரிப்பு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால், பல பருத்தி ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், பருத்தி நூலிழையை, அதிகளவில் வாங்க துவங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.அதேசமயம், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக, பருத்தி நூலிழைக்கான தேவை குறைந்திருந்ததையடுத்து, இதன் விலை மிகவும் சரிவடைந்திருந்தது. சர்வதேச பொருளாதார சுணக்க நிலையாலும், ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆர்டர் வரத்து மிகவும் குறைந்து போயிருந்தது. இவை, பருத்தி நூலிழை உற்பத்தியாளர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் பாதிப்பளிப்பதாக இருந்தது. இந்நிலையில், தற்போது, இதற்கான தேவை அதிகரித்துள்ளதையடுத்து, இத்துறையில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.
வங்க தேசம்:சீனா மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட ஒரு சிலநாடுகள், இந்தியாவிலிருந்து, பருத்தி நூலிழை வகைகளை அதிகளவில் இறக்குமதி செய்து கொள்ளத் துவங்கியுள் ளன.சீனாவில், பணியாளர்களுக்கான செல வினம் அதிகரித்துள்ளது. இதனால், அந்நாடு, நூற்பு நடவடிக்கைகளை குறைத்து கொண்டுள்ளது. அதேசமயம், நூலிழைகளை இறக்குமதி செய்து மதிப்புக்கூட்டப்பட்ட ஆடைகள் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.இதே போன்று வங்கதேசமும், நூலிழைகளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து, ஆடைகளை தயாரித்து, ஏற்றுமதி செய்வதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
பருத்தி ஏற்றுமதி:நடப்பு நிதியாண்டில், 70 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதி செய்யப் படும் என, ஜவுளித்துறை ஆணையர் தெரிவித்திருந்தார். கடந்த நிதியாண்டில், 1.20 கோடி பருத்தி பொதிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. கடந்த நிதியாண்டின், மொத்த பருத்தி ஏற்றுமதியில், சீனாவின் பங்களிப்பு, 65 சதவீத அளவிற்கு இருந்தது. ஆனால், சீனா, நடப்பாண்டில், பாதி அளவிற்கே பருத்தி இறக்குமதி செய்து கொள்ளும் வகையில், நடவடிக்கை எடுத்துள்ளது.மேற்கண்டவை தவிர,மின்தடையால், தென்மாநிலங்களில் இதன் உற்பத்தி குறைந்துள்ளது. போதிய அளவிற்கு, நூலிழை கிடைக்காததும், இதன் விலை உயர்விற்கு காரணம் என, இத்துறையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|