பதிவு செய்த நாள்
22 டிச2012
12:28
கடந்த சில நாட்களாக, கார் நிறுவனங்களுக்கு பீதியை ஏற்படுத்திய ஒரு விஷயத்துக்கு, மத்திய அரசு முடிவு கட்டியுள்ளது. "டீசலில் இயங்கும் கார்களுக்கு, பசுமை வரி விதிக்கப்படுமா?' என்ற உச்ச நீதிமன்ற கேள்விக்கு, மத்திய அரசு, மாற்று பதில் அளித்துள்ளது. டீசல் கார்கள் மீது, கூடுதல் வரி விதிக்கப்பட மாட்டாது என்று, லோக்சபாவில், மத்திய அரசு, திட்டவட்டமாக அறிவித்துள்ளது. டில்லியிலும், அதை சுற்றியுள்ளப் பகுதிகளிலும், டீசல் கார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, டில்லியில் சுற்றுசூழல் பாதிக்கப்படுகிறது. எனவே, டீசல் கார்களின் பயன்பாட்டை குறைக்க, அவற்றுக்கு கூடுதல் வரி வசூலிக்க வேண்டும் என்று கோரி, உச்சநீதி மன்றத்தில், வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர், 26ம் தேதி, இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய தலைநகர் பிராந்தியத்தில்( டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்) விற்பனை செய்யப்படும் டீசல் கார்கள் மற்றும் எஸ்.யு.வி., கார்களின் விலையில், 25 சதவீதம் கூடுதலாக, வரியாக வசூலிக்கப்படுமா? இந்த விஷயத்தில், பசுமை வரியை வசூலிக்க, மத்திய அரசிடம் திட்டம் உள்ளதா? என்று மத்திய அரசை கேட்டிருந்தது.
உச்ச நீதிமன்றத்தின், வனத்துறை வழக்குகளை விசாரிக்கும், "பெஞ்ச்' சுக்கு, பல ஆண்டுகளாக, உதவிகரமாக இருந்து வரும், சீனியர் வக்கீல் ஹரிஷ் சால்வே, டில்லியில், சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக தான், சி.என்.ஜி.,யில் இயக்கப்படும், பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், டில்லியில், டீசல் கார்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, இந்த எண்ணத்தை சிதைத்து விட்டது' என்று குறிப்பிட்டிருந்தார். டீசல் கார்களுக்கு, பசுமை வரி என்ற பெயரில் கூடுதல் வரி வசூலிக்க, கார் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்திய ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர்கள் சங்கமும்(சியாம்), இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு பதிலாக, டீசல் விலையை உயர்த்தலாம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்து இருந்தது. இந்த சூழ்நிலையில், கடந்த, 1ம் தேதி, லோக்சபாவில், அனுராக் சிங் தாக்கூர் எம்.பி., "டீசல் கார்களின் விற்பனையை கட்டுப்படுத்த, டீசல் கார்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் எண்ணம் அரசுக்கு உண்டா?' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம், "டீசல் கார்களுக்கு, கூடுதல் வரி வசூலிக்கும் எண்ணம் அரசிடம் இல்லை' என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். மத்திய அரசின் இந்த அறிவிப்பு, கார் நிறுவனங்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. அதே நேரத்தில் கூடுதல் வரி விதிக்கப்பட்டிருந்தால், டீசல் கார்களின் விலை உயரக் கூடும் என்ற நிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|